"Happy birthday மின்சார கண்ணா" என மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுவதையொட்டி கோவை மாநகர் முழுவதும் நீதிமன்ற தடையை மீறி மாவட்ட திமுகவினர் போஸ்டர்களை ஒட்டி சுவர்களை அசுத்தம் செய்துள்ளனர்.
கோவை: தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று தனது 47வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், ஆதரவாளர்கள், திமுக கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாநகரில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில் அவரது துறையை குறிப்பிட்டு காட்டும் வகையில் "Happy Birth Day மின்சார கண்ணா" என அச்சிடப்பட்டுள்ளது.
அந்த போஸ்டர்களில் திமுக கட்சியின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் புகைப்படம், தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி மலர் கொத்து அளித்த புகைப்படம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் உட்பட கோவை மாநகர திமுக நிர்வாகிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த போஸ்டர்கள் கோவை மாநகரில் உக்கடம், ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.