கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள சாலையில் கடந்த ஜனவரியில் குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டு பணிகள் முடிந்து சாலை அமைக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு அந்த சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள ஸ்டேட்பாங்க் சாலையில் கடந்த ஜனவரி மாதம் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்டது. குடிநீர் குழாய் பதிக்கபட்ட பின்னர் குழி மூடப்பட்டு சாலை போடப்பட்டது. இதனிடையே கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் ரயில் நிலையம் எதிரில் உள்ள சாலையில் நேற்றிரவு திடீரென பள்ளம் ஏற்பட்டது. சாலையின் நடுவில் ஏற்பட்டுள்ள அந்த பள்ளத்தால் அவ்வழியே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அந்த திடீர் பள்ளத்தில் யாரும் விழுந்து அசம்பாவிதங்கள் ஏற்படக் கூடாது என்பதற்காக தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன.
குடிநீர் குழாய் பதித்த பின்பு சாலையை முறையாக போடாததன் காரணமாவே சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டதாக குற்றம்சாட்டும் பொது மக்கள், உடனடியாக இந்த பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.