சரவணம்பட்டி அருகே கிடைத்த கஞ்சா சாக்லேட் கவரை வைத்து விற்பனை செய்து வந்த வடமாநிலத்தை சேர்ந்த நபரை போலீசார் பொறிவைத்து பிடித்து கைது செய்து, 1000 கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவையில் கஞ்சா, போதை மாத்திரை, புகையிலைப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் புழக்கத்தை தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக கோவை மாநகர காவல்துறை ஆணையர்பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் தனிப்படை போலீசார் அவ்வப்போது ரோந்து சென்று போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலை கைது செய்து வருகின்றனர்.
மேலும் அவர்களிடம் இருந்து, போதை பொருட்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபடுகின்றனர். அதன் அடிப்படையில் போதை பொருள் விற்பனை செய்யும் கும்பல்களை கைது செய்யும் சம்பவங்கள் சமீபத்தில் அதிகரித்து இருக்கின்றன.
தரையில் கிடந்த கஞ்சா சாக்லெட் கவர்
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மதுவிலக்கு மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சரவணம்பட்டி பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் காலி நிலம் அருகே ஒரு சாக்லேட் காகிதம் ஒன்று கிடைத்துள்ளது.
அது வழக்கமாக உட்கொள்ளப்படும் இனிப்பு சாக்லேட் காகிதம் அல்ல. இந்தி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கஞ்சா சாக்லேட் காகிதம். அதனை எடுத்துச் சென்ற போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பொதுமக்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சரவணம்பட்டி பகுதியில் கஞ்சா சாக்லேட் பிரியர்கள் அதிகமாக இருப்பதும் குறிப்பாக இளைஞர்கள் இதற்கு அடிமையாகி இருப்பதும் தெரிய வந்தது
சரவணம்பட்டியில் மதுவிலக்கு தனிப்படை போலீசார் விசாரணை.
கஞ்சா சாக்லெட் குறித்து தகவலறிந்த கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் மாரிமுத்து தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டைக்கு உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் சரவணம்பட்டி பகுதியில் முகாமிட்ட தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், அந்த கஞ்சா சாக்லேட்டுகளை வடமாநில இளைஞர்கள் அதிக அதிகளவில் விரும்பி உட்கொள்ளப்படுவதும் தெரிய வந்தது.
கஞ்சா பிரியர் போல் நடிக்க வைத்து பொறிவைத்து பிடித்த போலீஸ்
கஞ்சா சாக்லெட் வியாபாரிகளை பிடிப்பதற்காகபோலிசார் வழக்கமான விசாரணையை காட்டிலும் புது யுக்தியில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி,கஞ்சா சாக்லேட் பிரியர் போல ஒருவரை ஜோடித்து, அவர் மூலமாக கஞ்சா விற்கும் நபரை தேடிச் சென்றுள்ளனர்.
முதலில் கஞ்சா சாக்லெட் பயன்படுத்தும் வட மாநில வாலிபரிடம் போலிஸ் அறிமுகமாகினர். அவரின் மூலமாக கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யும் நபரை நெருங்கினர்.
பின்னர் ரகசிய தகவலின் அடிப்படையில் சரவணம்பட்டி பகுதியில் தனிப்படை போலிசார் ரோந்து சென்ற போது, கஞ்சா சாக்லெட் வியாபாரியை பிடித்தனர். இதனையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன.
வெல்டர் வேலையாள் போர்வையில் கஞ்சா சாக்லெட் விற்பனை
போலீசாரிடம் பிடிபட்ட அந்த நபர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பவானி சங்கர் கிலால். கோவையில் வடமாநில தொழிலாளர்களுக்கு போதை பொருள் சப்ளை நடந்து வந்த நிலையில் சமீபகாலமாக போலிசார் நடவடிக்கையில் போதைப்பொருள் புழக்கம் தடுக்கப்பட்டு வருகின்றன.
கஞ்சா கெடுபிடியை பயன்படுத்தி பவானி கஞ்சா சாக்லேட் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். அதன் அடிப்படையில் கோவையில் நேரடியாக முகாமிட்டு கஞ்சா சாக்லேட்டை விற்றால் போலீஸிடம் பிடிபட்டு விடுவோம் என நினைத்து, தொழிற்சாலை ஒன்றில் வெல்டர் பணியில் சேர்ந்து இருக்கின்றார்.
பெயருக்கு வெல்டராக பணியாற்றிய பவானி, பணி செய்யும் இடத்திலும் பணி முடிந்தவுடன் தீவிர கஞ்சா சாக்லேட் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஒடிசாவிலிருந்து கஞ்சா சாக்லெட்டை வாங்கி வந்து விற்பனை
15 நாட்களுக்கு ஒரு முறை ஒடிசா சென்று மூன்று ரூபாய்க்கு கஞ்சா சாக்லேட்டை வாங்கி வந்து 10 முதல் 15 ரூபாய் வரை கோவையில் விற்பனை செய்து வந்துள்ளார்.அதுவும் தமிழ்நாடு இளைஞர்களை கடந்து வட மாநில தொழிலாளிகளையே குறிவைத்து கஞ்சா சாக்லெட்டுகளை பவானி சாதாரணமாக விற்பனை செய்து வந்துள்ளார்.
கடைவீதி பகுதிகளுக்கு சாதாரண நபர் போல உலா வந்த அவர், கஞ்சா சாக்லேட் விற்பனையில் நாள்தோறும் ஈடுபட்டுள்ளார்.அவ்வாறு விற்பனை செய்த கஞ்சா சாக்லேட்டை உட்கொண்ட ஒரு நபர் புதர் பகுதியில் வீசிய கஞ்சா சாக்லேட் காகிதத்தை வீசியிருக்கிறார்.
அந்த கஞ்சா சாக்லெட்டின் காகிதமே கஞ்சா சாக்லெட் வியாபாரியை பிடிக்க மதுவிலக்கு போலீசாருக்கு உதவி இருக்கிறதுன. சொந்த ஊருக்கு சென்று கஞ்சா சாக்லேட்டுகளை கோயம்புத்தூருக்கு கடத்தி வரும் பவானி கஞ்சா சாக்லேட் விற்பனையில் முழு நாட்டத்துடன் ஈடுபட்டு வந்துள்ளார்.
கஞ்சா சாக்லெட் வியாபாரி கைது - 1,000 கஞ்சா சாக்லெட்டுகள் பறிமுதல்
கஞ்சா சாக்லெட் விற்பனையாளரை பிடித்த போலீசார் அவரிடம் இருந்து, 3.6 கிலோ அளவிலான 1000 கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் 390 கிராம் அளவிலான கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், பவானியை சிறையில் அடைத்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட பவானியின் பின்புலத்தில் இயங்கும் நபர்கள் யார் என்பது குறித்து புலன் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
போதை பொருள் விற்பனை - தடுக்கும் பணியில் போலீசார் தீவிரம்
போதை பழக்கம் மனிதனை சுய நினைவை இழக்கச் செய்து அவனை வெகுவாக துன்புறுத்துகின்றது . ஆனால் அது அவனை கடந்து மற்றவர்களை கூடுதலாக பாதிக்கிறது . போதை பிரியர்கள் ஜாலியாக ஆரம்பித்தாலும் அது தேவையற்ற வேலையில் சென்று முடிவடைகிறது. வழிப்பறி, கொள்ளை என ஆரம்பித்து கொலையில் சென்று இந்த குற்றங்கள் முடிவடைகின்றன.
எனவே சமூக சீரழிவுக்கு போதை பொருள் பயன்பாடு பெரும் பங்காற்றுவதனால் கஞ்சா , கஞ்சா சாக்லெட் , போதை பொருள் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குண்டாஸ் உள்ளிட்ட கடுமையான சட்டம் பாயும் என்றும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.