இன்று தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில், கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: இந்தி திணிப்பு, நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு ஆகியவற்றை கண்டித்து இன்று தமிழகம்முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர்கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து, கோஷங்களை எழுப்பினர். இந்தி திணிப்புக்கு எதிராகவும் பொது நுழைவுத் தேர்வுக்கு எதிராகவும் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதமருக்கு இந்தி திணிப்பை கண்டித்தும், ஒரே பொது நுழைவு தேர்வைதிரும்ப பெற வலியுறுத்தியும், புறா மூலம் தூதுவிடும் விதமாக புறா பறக்கவிடப்பட்டது.
இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் பேசியதாவது, இந்தியாவின் ஒற்றுமையையும், பண்பாட்டையும் சிதைக்கும் அரசாக பாஜக அரசு உள்ளது. மொழி, கலாச்சாரம், பண்பாட்டை கொண்ட நாட்டை மாற்றி இந்தி தான் இந்தியா என்று பாஜக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஒன்றிய பாஜக அரசு உடனடியாக இந்த கொள்கைகளை திரும்பப் பெற வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இது மாபெரும் வெற்றி போராட்டமாக மாறி உள்ளது. மொழி திணிப்பால் ஏற்படும் புரட்சியின் வெற்றி போராட்டமாகவும் இது அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.