பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (PFI) அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில், கோவை கோட்டைமேட்டில் உள்ள அந்த அமைப்பின் தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறையினர் இன்று பூட்டி சீல் வைத்தனர்.
கோவை: மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில், பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (PFI) மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவிட்டது.
நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றை சீர்குலைக்கும் விதத்தில் பயங்கரவாத செயலில் ஈடுபடுதல், அதற்கு நிதியளித்தல், கொடூரமாக கொலைகள் செய்தல் போன்ற தொடர் குற்றங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது எனக்கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்த பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (PFI) அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (PFI) தலைமை அலுவலகத்திற்கு தெற்கு வாட்டாச்சியர் சரண்யா தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்.
முன்னதாக, உக்கடம் சரக காவல்துறை உதவி ஆணையாளர் வீரபாண்டி தலைமையில் சென்ற அதிகாரிகள் அலுவலகத்தில் இருத்த ஆவணங்கள், பொருட்கள் ஆகியவற்றை சரி பார்த்து பதிவு செய்தனர்.
அனைத்தும் பதிவு செய்யப்பட்ட பிறகு வட்டாச்சியர் சரண்யா முன்னிலையில் PFI தலைமை அலுவலகம் மூடி சீல் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.