கடந்த 22 ஆம் தேதி கோவை பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சதாம் உசேன் (32) மற்றும் அகமது சிகாபுதீன் (24), கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை பாஜக மாவட்ட தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய இரண்டு பேர் மீதும், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. ஏற்கனவே, சிறையில் உள்ள இருவரிடமும் இது குறித்தான நகல் இன்று வழங்கப்பட்டது.
கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் மீது கடந்த 22 ஆம் தேதி மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர்.
இதைத்தொடர்ந்து ஒப்பனக்காரர் விதி, 100 அடி சாலை, குனியமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றதால் கோவை மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
மேலும் மாநகர் பகுதியில் சுமார் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கோவையில் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் இந்து அமைப்பினரின் வாகனங்களை தாக்கியவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதில், கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய கவுண்டம்பாளையம், சேரன் காலனியைச் சேர்ந்த சதாம் உசேன் (32), மற்றும் துடியலூர் ஆர்.எஸ்.தோட்டம், நேரு வீதியைச் சேர்ந்த அகமது சிகாபுதீன் (24), ஆகிய இருவர் மீதும் சி1 காட்டூர் காவல் நிலையத்தில் u/s 153 (A), 285 IPC @ 153 (A), 436, 511 IPC & 3 of Explosive Substance Act ன் படி பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் படி கோவை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சதாம் உசேன் மற்றும் அகமது சிகாபுதீன் ஆகிய இருவர் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இதற்கான உத்தரவு நகல், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் இன்று வழங்கப்பட்டுள்ளது.