ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கி அமைச்சர், தோண்டப்பட்ட சாலைகள் முறையாக சீரமைக்கப்படாமல் இருந்தால், சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு அவற்றை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாநில செய்தி துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாமல் இருப்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்தந்த ஒப்பந்ததாரர்களிடம் உடனுக்குடன் அழுத்தம் கொடுத்து பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாமிநாதன், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியில் காலதாமதம் ஏற்றுக் கொள்ள முடியாதது. ஒப்பந்ததாரர்களை ஆணையாளர் நேரில் வரவழைத்து தாமதத்திற்கான காரணங்களை கேட்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. எள்ளளவும் காலதாமதம் ஏற்றுக் கொள்ள முடியாதது.
பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக தோண்டப்பட்ட சாலைகளை உடனுக்குடன் சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல, பல்வேறு இடங்களில் தெருவிளக்கு எரிவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவற்றை தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர் பேருந்து நிலைய பணிகள் முடிவடைந்த நிலையில், விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும், என்றார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி, மாவட்ட ஆட்சியர் வினீத், மண்டல தலைவர்கள், மண்டல அலுவலர்கள் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.