வால்பாறையில் உள்ள டேன் டீ மூடப்பட்டதால் 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், ஒவ்வொருவருக்கும் ரூ.25 லட்சம் மற்றும் வீடு வழங்க வேண்டும் என்று தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை: வால்பாறை டேன் டீ எஸ்டேட் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தேயிலை தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் அமீது தலைமையில் தொழிலாளர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில், பல்வேறு அமைப்பு மற்றும் அரசியல் கட்சி தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
LPF தொழிற்சங்கத்தை சேர்ந்த சௌந்தர பாண்டியன், விடுதலை சிறுத்தை கட்சி - கேசவ முருகன் வீரமணி, பிஜேபி - தங்கவேல் செந்தில்முருகன், 14 வது வார்டு உறுப்பினர் என சுமார் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுடன், டேன் டீ நிறுவனத்திற்கு சொந்தமான சின்கோனா, பெரிய கல்லார், சின்னக்கல்லார், போன்ற எஸ்டேட் பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
கருத்து கேட்கும் கூட்டத்தில் தொழிலாளர்கள் பேசியதாவது:-
டேன் டீ நிறுவனம் மூடப்படுவதாக தெரிவித்திருக்கிறது. அங்கு, சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறோம். எங்கள் குழந்தைகள் இப்பகுதியில் படித்து வருகின்றனர். மேலும் எங்களை எஸ்டேட்டை விட்டு வெளியேற நிர்வாகம் தெரிவிக்கின்றனர். நாங்கள் வேலை செய்த கொண்டிருக்கும் பகுதியை விட்டு எங்களால் வெளியேற முடியாது.
நாங்கள் செல்ல வேண்டும் என்றால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்காதபடி, டேன் டீ நிர்வாகம் எங்களுக்கு ஒரு தொழிலாளிக்கு 25 லட்சம் ரூபாய் மற்றும் குடியிருக்க வீடு வழங்க வேண்டும், என்று தொழிற்சங்கம் கருத்து கேட்கும் கூட்டத்தில் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
தொழிலாளர்களின் கோரிக்கைகளை டேன் டீ நிர்வாகத்திடம் எடுத்துரைத்து, நல்ல முடிவை சொல்வதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, கோவையில் தேயிலை தோட்ட தொழிற்சங்கம் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், டேன் டீ நிர்வாகம் மூடப்பட்டால், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று விவாதிக்கப்பட்டது.