அதிமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுகவின் 51வது ஆண்டு விழாவை கொண்டாடுவது குறித்து நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் 300க்கும் அதிகமான நிர்வாகிகள் பங்கேற்பு.
கோவை: அ.தி.மு.க தொடங்கப்பட்டு வருகிற 17-ந் தேதி (திங்கட்கிழமை) 50-ம் ஆண்டு முடிந்து 51-வது ஆண்டு தொடங்குகிறது. இதனை தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் சிறப்பாக கொண்டாட முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், கோவை மாவட்டத்திலும் அ.தி.மு.கவின் 51-வது ஆண்டு தொடக்க விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து, கோவை அதிமுக மாவட்ட அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

கோவை அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், மாநகர், புறநகர் தெற்கு, புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் என 300 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கடந்த 50 ஆண்டுகளில் எண்ணற்ற சாதனைகளை அதிமுக செய்து இருக்கிறது. 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது.
இந்த 51 வது ஆண்டுவிழாவை கொண்டாடும் விதமாக அதிமுக கட்சியின் அனைத்து கொடி கம்பங்களும் பெயின்ட் அடிக்க வேண்டும். அவ்வாறு கம்பங்களை பெயின்ட் அடிக்க கழட்டினால், உடனே மீண்டும் அமைக்க வேண்டும். வாய்ப்பு இருக்கும் இடங்களில் புது கம்பங்கள் அமைத்து, புது கொடி கட்ட வேண்டும்.
கோவை காவல்துறை திமுக கட்சிகாரங்க போல நடந்து கொள்வதால், கம்பங்களை கழட்டினால் திரும்ப மாட்ட விடமாட்டார்கள் எனவே, கவனமாக இருக்க வேண்டும்.
வரும் 17 ம் தேதி சட்டமன்ற கூட்டம் நடைபெறவுள்ளது. எம்.எல்.ஏக்கள் இல்லாவிட்டாலும் மன்ற நிர்வாகிகள் கொடியேற்ற வேண்டும். பொதுகூட்டம் அறிவிக்கும் போது அதை மாநாடு போல அதிமுகவினர் நடத்த வேண்டும்.

திமுக மீது எதிர்ப்புகள் இருப்பதால் பொதுமக்களும் கூட்டத்திற்கு வருவார்கள். நமது ஐடி விங் துணிச்சலாக செயல்படுகின்றது. அவர்கள் மாவட்ட நிர்வாகிகளுடன் கலத்து பேசி செயல்பட வேண்டும். திமுக ஊடகங்களை கன்ட்ரோல் செய்து வைத்திருக்கிறது இவற்றை ஐடி விங் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
திமுகவை எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே துணிச்சலாக எதிர்க்கின்றார். கோவையில் திமுக கூட்டம் நடத்தினால் ஆட்சி போயிடும் என்று கருணாநிதி காலத்தில் இருந்தே ஒரு சென்டிமென்ட் இருக்கிறது.
நீட்டை கொண்டு வந்தது திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தான். நீட் வரக்கூடாது என்பது தான் நமது கொள்கை. ஆனாலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் எடப்பாடியார் தான். சாலைகள் சீரமைப்பு என திமுக கோவை மக்களுக்கு என எதுவுமே செய்யவில்லை. பொதுமக்கள் திமுகவினரிடம் கோரிக்கைகளை கொண்டு செல்லவே தயங்குகின்றனர்.
எந்த திட்டமும் செய்யாமல் இருக்கும் ஒரே முதல்வர் ஸ்டாலின். மீடியா மட்டுமே இந்த ஆட்சியை தூக்கி பிடித்து கொண்டு இருக்கிறது. மீடியா கைவிட்டால் ஆட்சி போயிடும். எங்கே பார்த்தாலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில், எடப்பாடியார் தலைமையில் இருக்கும் கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர். மோசமான, மக்கள் விரோத ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
திமுகவின் போஸ்டர்களை பார்த்து மக்கள் முகம் சுளிக்கின்றனர். அதிமுக போஸ்டர்களை மக்கள் விரும்பி பார்க்கின்றனர் அந்தளவிற்கு மக்களுக்கு நாம் செய்து இருக்கின்றோம், இவ்வாறு நிர்வாகிகளிடம் எஸ்.பி. வேலுமணி பேசினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓவ்வொரு குடும்பத்திலும் அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் இருக்கின்றது. திமுக முதல்வர் ஸ்டாலின் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை அதிமுக கொடுத்திருக்கிறது.
கோவையில் எந்த சாலையிலும் மக்கள் செல்ல முடியாத நிலை இருக்கின்றது மாநகராட்சி சாலைகள் பயணிக்க முடியாத அளவிற்கு மிக மோசமாக இருக்கின்றது.
இந்த ஆட்சி மாற வேண்டும் இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப, மக்கள் முடிவு செய்து விட்டனர். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும் எடப்பாடியாரே முதல்வராக இருக்கலாம் என மக்கள் நினைக்கின்றனர்.
நாளை, கோவை வரும் மத்திய விவசாய துறை அமைச்சரை சந்தித்து, உரம், கொப்பரை தேங்காய் விவகாரம் குறித்து மனு அளிக்கப்படும்.
இங்கே எப்போதும் இரு மொழி கொள்கை தான். தமிழகத்தில் இந்தி விவகாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என பா.ஜ.க தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார். பாஜக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருக்கின்றது. திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தியை எடுக்க சொல்ல வேண்டும்.
தமிழகத்தின் 39 எம்.பிகள் எதுவுமே செய்வது இல்லை காவிரி பிரச்சினைக்காக நாடாளுமன்றத்தை அதிமுக எம்.பிகள் முடக்கினர் இப்போது இருக்கின்ற எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் சீட்டை தேய்த்துவிட்டு வருகின்றனர். யாரையும் கட்டுப்படுத்த முடியாத முதல்வராக ஸ்டாலின் இருக்கின்றார். முதல்வருக்கு கட்டுப்படாதவர்களாக அந்த கட்சியினர் இருக்கின்றனர், என்று பேசினார்.