வால்பாறை அருகே தேயிலைத் தோட்ட தொழிலாளரின் வீட்டை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்திய சம்பவத்தால் கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், எஸ்டேட் வேலைக்கு செல்லும் தேயிலை தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது
நேற்று மீண்டும் கருமலை எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட 6 காட்டு யானைகள், அங்கிருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வாழை மரங்களை சாப்பிட்டும் அதே பகுதியில் உலா வருவதால், மக்கள் மிகுந்த கவனத்துடன் வெளியே வர வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இரவு நேரத்தில் மீண்டும் வனத்தை விட்டு யானைகள் வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் வந்து விடுமோ என்ற அச்சத்திலேயே இருந்ததாக தெரிவித்த கருமலை பகுதி மக்கள்,பயந்தபடியே அதிகாலை 4 மணி அளவில் மூன்று காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதியில் நுழைந்து சுந்தரம் என்பவரின் வீட்டு ஜன்னல் கதவு சுவர் மேற்கூரை ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தியது, என்றார்.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சுந்தரம் அவரின் மனைவி மகள் இரண்டு குழந்தைகள் ஆகிய நால்வரும் யானை ஜன்னலை உடைப்பதை பார்த்து பயந்து வீட்டின் பின் வழியாக பக்கத்து வீட்டுக்குசென்று தங்களை பாதுகாத்து கொண்டனர்.
சுமார் ஒரு மணி நேரமாக அங்கேயே நின்றிருந்த காட்டு யானைகள், பின்னர் வனப்பகுதிக்குள் சென்றதால் பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
தொடர்ந்து காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாலும் குடியிருப்பு பகுதிக்கு நுழைந்து வீடுகளை சேதப்படுத்தி வருவதாலும், காட்டு யானைகளை குடியிருப்பு பகுதிக்கு வராமல் தடுக்க வனத்துறை தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று எஸ்டேட் பகுதிகளில் வாழும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.