இரத்தினபுரியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்று வந்த மூன்று பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்து கடைகள் வலி நிவாரணி மருந்துகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
கோவை: கோவை மாவட்டம் மற்றும் மாநகர் பகுதிகளில் சட்டவிரோதமாக சமூக குற்றங்களில் குறிப்பாக கஞ்சா, புகையிலை பொருட்கள், போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடும் நபர்களை இரும்பு கரம் கொண்டு கோவை காவல்துறை அடக்கி வருகின்றனர்.
பல்வேறு சட்டவிரோத செயல்களில் இருந்து மக்களை காக்க தீவிர ரோந்து பணிகள், கைது நடவடிக்கைகள், குண்டாஸ் உட்பட கடுமையான சட்ட்டங்களின் கீழ் கைது, விழிப்புணர்வு என பல கோணங்களில் போதை பொருள் ஒழிப்புக்கு போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும், கோவையில் தொடர்ந்து கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை நடைபெற்று வருவது காவல்துறையினருக்கு பெரும் சவாலாகவே உள்ளது. ஒவ்வொரு நாளும், இரண்டு அல்லது மூன்று வழக்குகள், வித விதமான கடத்தல் முறைகள், கைது நடவடிக்கைகள் நடந்து கொண்டு தான் உள்ளது.
போதை மாத்திரைகள் - ரகசிய தகவல் - தனிப்படை அமைப்பு
கோவை இரத்தினபுரி பகுதியில் போதை மாத்திரை விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், ரத்தினபுரி காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் தலைமையில் உதவி காவல் ஆய்வாளர் கஸ்தூரி உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டைக்கு களமிறங்கினர்.
ரத்தினபுரி சுடுகாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்துக்கு இடமாக இருவர் நின்று கொண்டிருந்ததைப் பார்த்த தனிப்படை போலீசார், அவர்களைப் பிடித்து விசாரித்தனர். அப்போது, அந்த இருவரும் வலி நிவாரணி மருந்துகளை போதை மாத்திரைகளாக விற்பவர்கள் என தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது.
சிக்கிய மூவர் - 500 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்
காவல் நிலையத்துக்கு அந்த மூவரை அழைத்துச் சென்ற போலீசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சிவசங்கர் (39), டிப்ஸ் கார்த்திக் என்கிற கார்த்திக் (31) என்ற இருவரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், நள்ளிரவே அதே கும்பலை சேர்ந்த அபூபக்கர் (27) என்ற நபரும் கைது செய்யப்பட்டார்.
பின்னர், அவர்களிடம் இருந்து 500 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தப்பித்தவர்களை தேடும் தனிப்படை
போதை மாத்திரை விற்கும் கும்பலின் முதன்மை குற்றவாளி சிவசங்கர் உள்ளிட்ட மூவர் கைதாகியுள்ள நிலையில், அவர்களின் கூட்டாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிவசங்கர், டிப்ஸ் கார்த்திக், அபுபக்கர் உள்ளிட்டோருடன் இணைந்து போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆகாஷ், சிரஞ்சீவி, விவேக், சீனு கார்த்திக் உள்ளிட்டோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
மருந்துகடை பேரில் போதை மாத்திரை விற்பனையா?
போதை மாத்திரைகளை சட்ட விரோதமாக விற்று கைதான சிவசங்கர், காளப்பட்டி பகுதியில் மருந்துக்ககடை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே, அவர் முறையாக மெடிக்கல் நடத்துகின்றாரா..? இல்லை மருந்துகளை விற்கும் போர்வையில் மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்து வந்தாரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் சிவசங்கர் எவ்வாறு மருந்து கடை நடத்தி வந்தார்..? என்ற கேள்வியும் இருந்துள்ளது. சட்ட விரோதமாக போலி உரிமம் தயாரித்து மருந்துக்கடை நடத்தி வந்தாரா? என்பது குறித்தும் போலீசார் புலன் விசாரணை ஆரம்பித்திருக்கின்றனர்.
மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை...!
பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகள், மருத்துவர்களால் வலி நிவாரணியாக பரிந்துரைக்கப்படும் மாத்திரைகள் ஆகும். போதைக்காக மாத்திரைகளை பொடியாக்கி ஊசிகளில் செலுத்திக் கொள்வதால் மயக்க நிலைக்கு தள்ளி மனிதனை அத்துமீற செய்யும்.
மாத்திரைகளை பரிந்துரை இல்லாமல் நரம்புகளில் ஊசி மூலம் செலுத்தி கொள்வதால், அதீத போதைக்கு தள்ளப்பட்டு, கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட தூண்டுதலாய் அமையும்.
முறையாக மருந்துக் கடை நடத்துவோர், சட்டவிரோத போதை மாத்திரை விற்பனை கும்பல்களுக்கு துணை போனால், உரிமம் ரத்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர்.
இது போன்ற சட்டவிரோத செயல்கள் நடைபெறாமல் இருக்க குற்றவாளிகளுக்கு எதிராக காவல்துறையின் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் மீது கடுமையான சட்டங்கள் பாயும் என்று காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.