வால்பாறையில் அரசு கல்லூரி அமைய முக்கியமான காரணமாக இருந்த மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கத்திற்கு கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.
கோவை: முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கம் மறைவிற்கு, வால்பாறை அரசு கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
வால்பாறையில் அரசு கல்லூரி அமைய முக்கியமான காரணமாக இருந்த கோவை தங்கத்தை நினைவு கூர்ந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி அனுசரித்தனர். பின்னர், அவரது திருவுவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸில் மூத்த தலைவராக இருந்த கோவை தங்கம் (74) இன்று காலமானார் தனியார் மருத்துவமனையில் காலமானார்.
இவர், கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்றத்தில் கடந்த 2001 மற்றும் 2006ல், சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். பின்னர், 2011-ல் இதே தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆறுமுகத்திடம் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
2006 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்த கோவை தங்கம், அப்போதைய திமுக ஆட்சியில் வால்பாறை எஸ்டேட் பகுதியில் வாழும் தொழில்லார்கள், குழந்தைகள் கல்லூரியில் படிப்பதற்கு பொள்ளாச்சி மற்றும் கோவை பகுதிகளுக்கு செல்வதால் அதிக சிரமம் ஏற்படுகிறது என்பதை சுட்டிக்காட்டி வால்பாறை பகுதியில் கல்லூரி அமைக்க வேண்டும் என்று அன்றைய முதல்வர் மு. கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தார்.
அவரது தொடர் கோரிக்கையால், வால்பாறையில் அரசு கல்லூரி கட்டப்பட்டது. இருமுறை வால்பாறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த கோவை தங்கம் அங்குள்ள எஸ்டேட் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்த கோவை தங்கம் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போது அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை குழுவில் இருந்தார்.
அப்போது, வால்பாறை தொகுதியில் போட்டியிட அவருக்கு சீட் வழங்கப்படாததால் அதிருப்தியடைந்த அவர், வால்பாறையில் சுயேச்சையாக நிற்க போவதாக அறிவித்தார்.
பின்னர், சட்டமன்றத் தேர்தலுக்குஒரு மாதத்திற்கு முன்னதாக மார்ச் மாதம் தமிழ் மாநில காங்கிரஸ்யில் இருந்து விலகி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், கோவையில் உள்ளதனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர் சிகிச்சையில் இருந்த அவர், நள்ளிரவு 12.20 மணியளவில் காலமானார்.
சாய்பாபா காலனியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை 5.30 மணிக்கு இறுதி சடங்கு நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.