மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஈச்சனாரி மற்றும் அரிசிபாளையம் பகுதியில் உள்ள ரெஸ்டாரன்ட்களில் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 31 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவை மாவட்டம் ஈச்சனாரி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக மதுக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதுதொடர்பாக மதுக்கரை காவல் ஆய்வாளர் வைரம் தலைமையிலான போலீசார் நேற்றிரவு குறிப்பிட்ட அந்த ரெஸ்டாரண்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த ரெஸ்டாரண்டில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த எட்டு மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த அன்புராஜை கைது செய்தனர்.
இதேபோல் அரிசிபாளையம் பகுதியில் உள்ள ரெஸ்டாரண்டில் சோதனை செய்த போலீசார், அங்கு சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 23 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் மதுவிற்பனையில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை கைது செய்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.