சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ரோட்டரி கிளப் சார்பாக நடைபெற்ற சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநகர காவல் ஆணையர், 300 மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்.
கோவை: சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு,ரோட்டரி கிளப் சார்பாக பெண் குழந்தைகளுக்குசைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராககோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு, 300 மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையாளர், நான் 6 ஆம் வகுப்பு படிக்கும் போது முதல் சைக்கிளை வாங்கினேன். அந்த சைக்கிளும் குலுக்கல் பரிசு மூலம் கிடைத்தது. பள்ளி பருவத்தில் நாம் ஓட்டிய சைக்கிள் பல்வேறு நினைவுகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
குழந்தைகள் படிப்பு, விளையாட்டு என இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பெண் குழந்தைகள் இயற்கையின் பரிசு. கோவை மாநகரில் குழந்தைகள் பாதுகாப்பிற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, குற்றங்கள் நடந்த பிறகு குற்றவாளிகளை பிடிப்பதை தாண்டி குற்றங்களை தடுக்கவும், குழந்தைகளை பாதுகாப்பதிலும் அதிக கவனம் செலுத்துகிறோம்.
குடிசை பகுதிகள், சில முக்கிய தெருக்களில் சிறு நூலகம் அமைத்துள்ளோம். பெண் பாதுகாப்பு இல்லாத குறிப்பாக ஒற்றை பெற்றோர், மனநலம் பாதிக்கப்பட்ட, மாற்றுத்திறனாளி பெண் குழந்தைகள் மற்றும் குடிபழக்கத்திற்கு அடிமையான பெற்றோர் உள்ள வீடுகளுக்கு நேரடியாக பெண் காவலர்கள் சென்று அவ்வப்போது அவர்களது பாதுகாப்பை உறுதி செய்து வருகிறோம்.
பொதுவாக ரோந்து வாகனத்தில் அடிக்கடி தெருக்களில் செல்லும் போது பொதுமக்கள் தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை உணருவார்கள் அது மிகவும் முக்கியம். அதேபோல, பெண் குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கே சென்று அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்வது அவர்களுக்கு நம்பிக்கை மற்றும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை உணர வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கோவை மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளில் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை காவல்துறை நடத்தி வருகிறது, என்றார்.
நிகழ்ச்சியில், ரோட்டரி கிளப் மாவட்ட கவர்னர் ராஜ்மோகன் நாயர், முன்னாள் கவர்னர் சகாதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.