மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, ஆட்சியர் வினீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், செயல்படுத்த வேண்டிய திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில், மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசு திட்டங்களில் வருவாய்த்துறை, கல்வித்துறை, பொதுப்பணித்துறை, ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் முடிவுற்று மக்கள் பயன்பாட்டில் உள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த கூட்டத்தில் பேசிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, திருப்பூர் மாவட்டத்தை பொருத்தவரை மத்திய அரசின் திட்ட பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்து வரும் திட்டங்களையும் அதிகாரிகள் சிறப்பாக செயல்படுத்த வேண்டும், என்றார்.