பல்வேறு திருட்டு, வழிப்பறி வழக்குகளில் தேடப்பட்டு வந்த உண்ணி என்ற மதுசூதனன், நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து மீண்டும் சிட்ரா பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட போது, பீளமேடு காவல் ஆய்வாளர் கணேஷ், உதவி காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் மற்றும் காவலர்கள் அவரை மடக்கி பிடித்தனர்.
கோவை: சைபர் குற்றங்கள், கஞ்சா விற்பனை, வாகன திருட்டு, வீடு புகுந்து கொள்ளை போன்ற குற்றங்கள் ஒருபுறம் அதிகரித்து வந்தாலும், மறுபுறம் வழிப்பறி கொள்ளையர்களால் இரவு நேரங்களில் வேலை முடித்து செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பாதசாரிகள் மிகுந்த அச்சத்துடன், விழிப்புடன் செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அவ்வாறு கோவையில் பல்வேறு பகுதிகளில் வழிப்பறிக் குற்றங்கள் நடைபெற்று வந்தாலும், பீளமேடு, சிட்ரா, சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் கத்தியை காட்டி நகைகள், செல்போன், பணம் ஆகியவற்றை பறிக்கும் சம்பவங்கள்அடிக்கடி அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் நேற்று (ஆக் 10) நள்ளிரவு அவிநாசி சாலை சிட்ரா பகுதியில் கதிரவன் என்பவர் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
அப்போது, அவரை வழிமறித்த மர்ம நபர் ஒருவர் அவரிடம்கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.5,400 பணத்தை பறித்து சென்றுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட கதிரவன் பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற பீளமேடு போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். பின்னர், பிடிபட்ட நபரை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏனெனில், வழிப்பறியில் ஈடுபட்டதாக பிடிபட்ட நபர், போலீசாரால் பல நாட்களாக தேடப்பட்டு வந்த பிரபல வழிப்பறி கொள்ளையன் உன்னி என்கிற மதுசூதனன் என்பது தெரியவந்தது.
27 வயதான உன்னி எந்த வேலைக்கும் செல்லாமல், வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதே தனது முழு நேர தொழிலாக செய்து வந்துள்ளார்.
இவர் மீது ஏற்கனவே சரவணம்பட்டி, பீளமேடு காவல் நிலையங்களில் வழிப்பறி உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பல்வேறு வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்த பிரபல வழிப்பறிக் கொள்ளையன் மீண்டும் வழிப்பறி செய்யும் போது போலீசாரிடம் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் "பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்" என்ற பழமொழியை மெய்ப்பித்துள்ளது.
போலீசாரின் துரித நடவடிக்கை காரணமாக, கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது பீளமேடு மற்றும் சரவணம்பட்டி பகுதி மக்களிடையே நிம்மதி பெருமூச்சு விட செய்திருக்கிறது.

பிரபல வழிப்பறி கொள்ளையனான உன்னியை கைது செய்த பீளமேடு காவல் ஆய்வாளர் கணேஷ், உதவி காவல்ஆய்வாளர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பீளமேடு காவல் நிலைய போலீசாருக்கு மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.