திருப்பூர் பல்லடம் அடுத்த அக்ரி காலனி பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில், ஒடிசா மாநில தொழிலாளியை கைது செய்து அவரிடம் இருந்து 250 கிலோ குட்கா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்பூர்: பல்லடம் அருகேயுள்ள அருள்புரத்தை அடுத்த அக்ரி காலனி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் அப்பகுதியில், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, வட மாநில தொழிலாளி ஒருவர் தங்கியிருந்த வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி தேபாபிரட் பிஸ்வால் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, 250 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் குட்கா பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்து, ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.