தொண்டாமுத்தூர் அடுத்த சித்திரைச்சாவடி பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் இருந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: தொண்டாமுத்தூர் அடுத்த சித்திரைச் சாவடி பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது விவசாய தோட்டத்தில் கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் (07.10.2022) காலை வழக்கம் போல கிணற்றின் அருகே சென்று பார்த்த போது அதில் ஆண் சடலம் மிதப்பது போல தெரிந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பார்த்திபன், உடனடியாக தொண்டாமுத்தூர் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன், கிணற்றில் இருந்த ஆண் சடலத்தை மீட்டனர்.
மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத ஆண் சடலமானது, இறந்து சில நாட்களாகி அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள தொண்டாமுத்தூர் போலீசார், சடலமாக மீட்கப்பட்டது யார்? கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விவசாய கிணற்றில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலம், அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.