தன்னார்வ அமைப்பின் சார்பில் ஆட்டோவில் நடமாடும் நூலகம் திட்டத்தை தொடங்கி வைத்த மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், விரைவில் கோவை மாநகரில் இயங்கும் 2,000 ஆட்டோக்களில் நடமாடும் நூலகம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
கோவை: மக்களிடையே வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில், மாநகரில் உள்ள சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் நூலகம் அமைக்கும் முயற்சியில் மாநகர காவல்துறை ஈடுபட்டு வருகிறது.
இதன் துவக்கமாக, டாக்டர் கலாம் பவுண்டேசன் என்ற தன்னார்வ அமைப்பின் முயற்சியில் ரூ.20ஆயிரம் மதிப்பில் நடமாடும் ஆட்டோ நூலகம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் நூலகத்தை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் இன்று துவங்கி வைத்தார்.
தமிழ் நாவல்கள், உரைநடை புத்தகங்கள் வாராந்திர மற்றும் மாத தமிழ், ஆங்கில இதழ்கள் என பலதரப்பட்ட நூல்கள் உள்ள இந்த நடமாடும் ஆட்டோ நூலகத்தை திறந்து வைத்த ஆணையர், மக்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஆட்டோவில் பயணம் செய்து புத்தகங்களை வாசித்தார்.
கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த சையது என்பவரின் ஆட்டோவில் முதல் முறையாக துவக்கப்பட்டுள்ள இந்த திட்டம் மூலம் பயணங்களின் போது செல்போன் பயன்பாட்டை குறைத்து, மக்களிடையே வாசிப்பு திறனை ஊக்குபடுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும் என்றார்.
நடமாடும் ஆட்டோ நூலகத் திட்டத்தை குறித்து பேசிய மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், கோவை மாநகரில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. இந்த ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் புத்தகம் படிக்கவும், பயணத்தின் போது பயணிகள் படிக்கும் வகையில் இந்த நடமாடும் நூலகம் அமைக்க திட்டமிட்டு வருகிறோம்.
முதல் முயற்சியாக, கலாம் பவுன்டேசன் உதவியுடன் சையது என்பவர் ஆட்டோவில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், தினசரி நாளிதழ் , புத்தகம், சாக்லெட், முகக்கவசம், குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது.
மனிதனின் நல்ல முறையான மாற்றத்திற்கு புத்தகங்களின் பங்களிப்பு மிகப்பெரியது. பொதுவாக நூலகம் மற்றும் வீடுகளில் புத்தகம் வைத்திருப்பார்கள், ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் படிக்க வேண்டும் என்பதற்காக இந்த நடமாடும் ஆட்டோ நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கோவை மாநகர காவல்துறை சார்பில் வீதிக்கு ஒரு நூலகம் என்ற பெயரில் குழந்தைகளுக்கான கற்பனை திறனை வளர்க்கும் வகையில் கதை புத்தகங்களை வைத்துள்ளோம்.
கடந்த சில நாட்களுக்கு முன் கொடிசியாவில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் ஏராளமான மக்கள் புத்தகங்களை வாங்கிச் சென்றனர். புத்தகம் அறிவை கூர்மையாக்கும் ஒரு ஆயுதம், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், மக்கள் அமைதியான வாழ்க்கையை வாழ்வதற்கும் புத்தகங்கள் இன்றியமையாத ஒன்றாகும்.
எனவே, வரும்.நாட்களில் கோவை மாநகரில் உள்ள 2000- க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் நூலகம் அமைக்க திட்டமிட்டு வருகிறோம். கூடிய விரைவில் ஆட்டோக்களை அடுத்து, கால் டாக்ஸிகளிலும் நூலகம் அமைப்பதற்காக பேசி வருகிறோம். பெரும்பாலும், மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய புத்தகங்களை அதில் வைக்க உள்ளோம்.
இவ்வாறு காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.