விஜயதசமி, ஆயுதபூஜை விழாக்களை முன்னிட்டு கடைகளில் விற்பனை செய்யப்படாத வாழை மரங்கள், பூக்கள் சாலைகளில் குப்பைகளாக தேங்கியுள்ள நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் இரவோடு இரவாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு மாநகரின் பல்வேறு பகுதிகளில் இரவோடு இரவாக குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியை மாநகராட்சி மேயர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் நேற்றும் இன்றும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது. தொழில் நிறுவனங்கள் அதிகம் நிறைந்த திருப்பூர் மாவட்டத்தில் ஆயுத பூஜை விழா மிக விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இதற்காக பின்னலாடை நிறுவனங்கள் சுத்தம் செய்து வாழை மரக்கன்றுகள் நிறுவனங்களின் நுழைவாயில் மற்றும் இயந்திரங்களுக்கு கட்டி பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம்.
இதற்காக திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு வாழை மரக்கன்றுகள், பூக்கள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
விற்பனை நிறைவடைந்ததை அடுத்து, விற்பனையாகாத வாழை மரங்கள், பூக்கள் மற்றும் தோரணங்களை வியாபாரிகள் ஆங்காங்கே விட்டுச் சென்றதால், அவைகள் அழுகும் நிலையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் தேங்கிக் கிடந்தன.
இந்நிலையில் இரவோடு இரவாக அவற்றை தூய்மை பணியாளர்களை கொண்டு அப்புறப்படுத்தும் பணியானது நடைபெற்றது.
இப்பணிகளை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ள வேண்டும் என தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தினர்.
குப்பைகள் தேங்காதவாறு உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் திருப்பூர் மாநகராட்சிக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.