வித்யாரம்பம் நிகழ்ச்சியை முன்னிட்டு கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வந்து வித்யாரம்பம் என்ற எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கோவை: நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமி இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், கல்வி, கலைகள் என எது தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பது நம்பிக்கை. இதனால் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக்கருவிகள், நடனம் ஆகிய பயிற்சிகள், பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்குவது வழக்கம்.
இதற்காக குழந்தைகளுக்கு வித்யாரம்பம் என்னும் எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சி ஆண்டுதோறும் அய்யப்பன் கோவில்களில் நடைபெறும். அதன்படி, கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் இந்த நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் விஜயதசமி அன்று இந்த நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்தாண்டும் விஜயதசமியை முன்னிட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
குழந்தைகளின் விரலை பிடித்து "ஹரி ஸ்ரீ கணபதியே நமஹா" என எழுதியும் பச்சரியில் "ஓம்" என்றும் "அம்மா" "அப்பா" என்றும் விரல் பிடித்து குழந்தைகளை பெற்றோர்கள் எழுத வைத்தனர்.
விஜயதசமி தினத்தன்று குழந்தைகள் கல்வியை துவங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை.
அதனடிப்படையில் கோயில்களில் விஜயசதமி முன்னிட்டு வழிபாடுகளுடன் குழந்தைகளின் கல்வி கற்றலை தொடங்கியுள்ளதாக, பெற்றோர்கள் தெரிவித்தனர்.
விஜயதசமி முன்னிட்டு இன்று சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.