அன்சூர் குளத்தில் விற்பனைக்காக மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருவதால், டீசல் படகுகளை இயக்கினால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்பதால் துடுப்பு படகுகளை விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கோவை: மேட்டுப்பாளையம் அருகேயுள்ள வெள்ளியங்காடு பகுதியில் உள்ள அன்சூர் குளத்தில் டீசல் எஞ்சின் படகுகளை இயக்காமல், துடுப்பு படகுகளை இயக்குவது குறித்து மாநகராட்சி நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளியங்காடு பகுதியில் அமைந்துள்ள அன்சூர் குளம், கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
இக்குளத்திற்கு, பில்லூர் அணை மற்றும் வெள்ளியங்காடு - மஞ்சூர் செல்லும் சாலையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து வரும் மழை நீர் வருகிறது.
இதனால், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விளைநிலங்களுக்கு நிலத்தடி நீர் கிடைத்து வருகிறது.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அன்சூர் குளத்தில் மேட்டுப்பாளையம் மீனவர் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மீன் குஞ்சுகளை வளர்த்து விற்பனைக்கு எடுத்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் அரசு சார்பில் இக்குளத்தை பராமரித்து இங்கே டீசல் படகு விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு டீசல் படகு குளத்தில் இயக்கினால்,இதிலுள்ள மீன் குஞ்சுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் இத்தொழிலை நம்பியுள்ள 200 க்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் டீசல் படகிற்கு பதிலாக துடுப்பு படகை விட வேண்டும் என்றுமேட்டுப்பாளையம் மீனவர் சங்க உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் மீனவர் கூட்டுறவு சங்க இயக்குனர் மீன் நடராஜ் பேசியதாவது,
இக்குளத்தை சுற்றுலாத்தலமாக மாற்றுவது வரவேற்கத்தக்கது. ஆனால், இக்குளத்தை நம்பி 200-க்கும் மேற்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் உள்ளன.அவர்களின் வாழ்வாதாரம் தடைபடாமல் தொடர்ந்து குளத்தில் மீன்பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.