காந்தி ஜெயந்தியன்று மதுபான கடைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், இதனை பயன்படுத்தி மதுபானங்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த 36 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: காந்தி ஜெயந்தியன்று தடையை மீறி மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்த 36 பேரை மதுவிலக்கு அமலாக்க துறை போலீசார் கைது செய்துள்ளனர்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் மதுக்கடைகளுக்கு கடந்த அக்டோபர் 2ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இதனை பயன்படுத்தி சிலா் சட்டவிரோதமாக மது பாட்டில்களைப் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில், பீளமேடு, போத்தனூா், சிங்காநல்லூா், சரவணம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மதுவிலக்கு அமலாக்க துறை மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
இந்த சோதனையில், தடையை மீறி மாநகரில் மதுபானங்களை விற்பனை செய்த 16 பேரும், புறநகரில் 20 பேரையும் என மொத்தம் 36 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 734 மது பாட்டில்கள், மற்றும் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.