கோவை தொண்டாமுத்தூர் அருகே பூலுவபட்டியில் முக்காளி, சிறுவாணி செல்லும் சாலையில் புதிதாக வைக்கப்டுள்ள மையில் கல்லுக்கு மாலை அணிவித்து, வாழை மரம் கட்டி, வாழை இலை படையலிட்டு பூசை செய்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
கோவை: நாளை ஆயுத பூஜையை வெகு விமர்சியாக கொண்டாட பொதுமக்கள் தயாராகி வரும் நிலையில், கோவையில் வித்தியாசமான ஒரு ஆயுத பூஜை அனைவரும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வழக்கமாக ஆயுத பூஜை அன்று டிவி, ஃபிரிட்ஜ், வாகனங்கள், அருவாமனை போன்ற நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்து ஆயுத பூசை செய்வர். அதேபோல தொழிற்சாலைகளில் உள்ளவர்கள், மெசின்களுக்கு பூசை செய்வார்கள்.
ஆனால் குசும்புக்கு பெயர்போன கோயமுத்தூரில் முக்காளி, சிறுவாணி செல்லும் சாலையில் உள்ள தொலைவு கல் (அல்லது) மைல் கல்லிற்கு மாலை அணிவித்து, வாழை மரம் கட்டி , வாழை இலை படையலிட்டு பூசை செய்துள்ள புகைப்படங்கள் ஆச்சரியத்திலும் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
மையில் கல்லுக்கு மாலையிட்டு, பூ விட்டு, பொட்டிட்டு என நெடுஞ்சாலைத் துறையினர் இந்த வேலையை செய்திருக்க மாட்டார்கள், எனவே, அப்பகுதி மக்கள் அல்லது அங்குள்ள வாலிபர்கள் தான் இதை செய்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
மறைந்த நடிகர் விவேக் ஒரு படத்தில் மைல் கல்லை குல தெய்வமாக வழிபடுவதை காட்சிப்படுத்தி ரசிக்க வைத்து அசத்தியிருப்பார். அந்த வகையில், கோவையில் மைல் கல்லுக்கு ஆயுத பூசை படையல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.