பொதுமக்களிடையே இணக்கமான சூழல் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்தி போதை பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்க கோவை மாநகர காவல் துறை சார்பாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
கோவை:சமீபகாலமாக, கோவையில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில், குறிப்பாக பெற்றோர் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபுறம் போதைப் பொருள் புழக்கத்தை வேரோடு களைய முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும், மறுபுறம் போதை பொருள்களுக்கு அடிமையாகும் இளைஞர்களுக்கு,கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
போதை பொருள் புழக்கத்தை வேரோடு அழிக்க மாநகர காவல்துறை முனைப்பு.
கடந்த ஆறு மாதத்தில் மட்டும் போதை வழக்குகள் தொடர்புடைய எண்ணற்ற குற்றவாளிகளை கைது செய்தும், இவர்களுக்கு எவ்வாறு போதை பொருள் கிடைக்கிறது? எப்படி கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை பொருட்களை விற்கப்படுகிறது?என்ற பல்வேறு கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திரும்பும் இடமெல்லாம் போலீசார் கெடுபிடி அதிகமாக உள்ளதால், போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவ, போதை பொருட்களை விற்க மற்றும் கடத்த பல்வேறு நூதன முறைகளை கையாண்டு வருகின்றனர். சாக்லேட் வடிவத்தில், பேஸ்ட் வடிவத்தில் மற்றும் கொரியர் மூலம் அனுப்புவது என பல்வேறு நூதன முறைகளை போதைப் பொருள் ஆசாமிகள் கையாண்டு வருவது அம்பலமாகியுள்ளது.
விழிப்புணர்வே முதல் தீர்வு...!
போதை பொருள் ஒழிப்பு என்பது இன்றோ அல்லது நாளை காலையோ ஒழிக்கக்கூடிய விஷயம் அல்ல.
மக்கள், காவல்துறை, இளைஞர்கள் என்பவர்களது கூட்டு முயற்சியால் மட்டுமே போதை பொருள் இல்லா ஒரு நகரமாக கோவையை மாற்ற முடியும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஒருபுறம் சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடர்ந்தாலும், மறுபுறம் போதை பொருளுக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைக்கும் இளைஞர்களுக்கு சரியான முறையில் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலே, இந்த போதை பொருள் புழக்கம் மற்றும் பழக்கத்தை அடியோடு ஒழித்து விட முடியும் என்பதில் ஐயமில்லை.
கிரிக்கெட் போட்டிகள் மூலம் விழிப்புணர்வு - பொதுமக்கள் Vs காவல்துறை...!
தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கோவை மாநகர போலீசார், தற்போது புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள விழிப்புணர்வு முயற்சி தான் CCP கிரிக்கெட் போட்டிகள்.
பொதுமக்களிடையே இணக்கமான சூழல் என்பதை கடந்து இளைஞர்களுக்கு விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்தி போதை பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாகவும் இப்போட்டிகள் பார்க்கப்படுகிறது.
இந்த நட்பு ரீதியான கிரிக்கெட் தொடரை ஊக்குவிக்கும் படியாகநேற்று கோவைவேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் "சிக்சர்" அடித்து அசத்தினார்.
கடந்த 24ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்று வரும் இந்த கிரிக்கெட் போட்டி காவல்துறைக்கு தனியாகவும், பொதுமக்களுக்கு தனியாகவும் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், காவல் துறை சார்பில் 10 அணிகளும் - பொதுமக்கள் சார்பில் 64 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த தொடரின் லீக் போட்டிகள் கோவை வேளாண் பல்கலைக்கழக மைதானத்திலும்,இறுதி போட்டிகள் வரும் அக்டோபர் 2ஆம் தேதி பி.எஸ்.ஜி ஐ.எம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
போட்டியில்,முதல் பரிசு ரூ.25,000, இரண்டாவது பரிசு ரூ.15,000, மூன்றாவது பரிசு ரூ.7,500, நான்காவது பரிசு ரூ.3,000 வழங்கப்படும், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெறும் பெயரளவுக்கு, காவல்துறை உங்கள் நண்பன் என்பதை சொல்வதைக் காட்டிலும், பொதுமக்களில் ஒருவர் தான் காவல்துறையினரும், அவர்களை எந்த நேரமும் நாம் தைரியமாக அணுகலாம் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் விதைக்கும் இது போன்ற போட்டிகள், இரு தரப்பினரிடையே இணக்கத்தை அதிகரிக்க ஒரு படிக்கல்லாய் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டிகளில், எந்த அணி வெற்றி பெறப்போகிறது என்பதை தாண்டி, ஓரணியாக நின்று போதை பொருள் போன்ற சமூக விரோத செயல்பாடுகளை விரட்டி அடிக்க வேண்டும் என்பதேஇப்போட்டியின் நோக்கமாகும்.