தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு, போனஸ் குறித்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து அக்.,2ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தற்காலிக தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
கோவை: மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் போனஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், வரும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஒப்படந்த தூய்மை பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கோவை மாநகராட்சியில் தூய்மை பணி, திடக்கழிவு மேலாண்மை, ஓட்டுனர் மற்றும் சுகாதார பணிகளில் சுமார் 4,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு தின கூலியாக 323 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகவும், கடந்த சில ஆண்டுகளாக ஊதிய உயர்வு எதுவும் செய்யப்படவில்லை மற்றும் கொரோனா காலத்தில் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை என்ற
குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக முறையான ஊதியம், தொழிலாளர்களுக்கான சலுகைகளை வழங்க வேண்டும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 15ஆயிரம் ரூபாய் போனஸாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகள் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சார்பில் வைக்கப்பட்டது.
இந்த 19 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுடன் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்கங்களின் சார்பில் நிர்வாகிகள் பன்னீர்செல்வம், செல்வராஜ், மணியரசு, செல்வம் உள்ளிட்டோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, கோவை மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்த தூய்மை தொழிலாளர்களுக்கு முறையான ஊதிய உயர்வு மற்றும் போனஸ் தொடர்பாக பதில் அளிக்கவில்லை என்று ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
மேலும், கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது வழங்கப்பட்ட போனஸ் தொகை ரூ.3,000 ஆவது இந்தாண்டு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது என்றனர்.
"தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு அரசாணைப்படி சம்பளம் வழங்கப்படவில்லை. மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்த நிறுவனங்களுடன் பேசி முறையான சம்பளம் மற்றும் போனஸ் பெற்றுத்தர முன்வரவில்லை. ஊதியம், போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் ஏற்படவில்லை. எனவே, வருகிற 2-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது" என்று தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகராட்சியில் தினமும் சுமார் ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. போராட்டம் காரணமாக குப்பை அகற்றும் பணி நடத்தப்பட மாட்டாது. தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும். எங்களின் கோரிக்கை ஏற்கப்பட்டால், போராட்டத்தை வாபஸ் பெற தயாராக இருக்கிறோம்., இவ்வாறு அவர்கள் கூறினர்.