பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த மருத்துவர் கலைச்செல்வி சரிவர மருத்துவமனைக்கு வருவதில்லை என்ற தொடர் புகார்கள் உறுதிப்படுத்தப்பட்டதால், அவரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை: பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவமனை கண்காணிப்பாளராக மருத்துவர் கலைச்செல்வி பணியாற்றி வந்தார். இவர் சரிவர மருத்துவமனைக்கு வருவதில்லை எனவும் மருத்துவமனை பணிகளையும் கவனிக்காமல் உள்ளதாக, மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று பொள்ளாச்சி பகுதியில் சரக்கு ஆட்டோ மற்றும் தனியார் பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில், இருவர் பலியான நிலையில், பேருந்தில் பயணித்த பயணிகள் காயங்களுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அவ்வாறு சிகிச்சை பெற்று வருபவர்களை நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க கோவை மாவட்ட ஆட்சியர் ஜி எஸ் அமீரன் மருத்துவமனைக்கு சென்று இருந்தார். அப்போது, மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவமனைக்கு சரியாக வருவதில்லை என வந்த புகார்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில், புகார் உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து மருத்துவமனை கண்காணிப்பாளர் கலைச்செல்வியை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.