கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் ஜெயராஜ் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றவாளிக்கு ஆயுள் மற்றும் 2,500 அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார்.
கோவை: கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை சுல்தான்பேட்டை அடுத்த பூசாரிபாளையம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரது தோட்டத்தில் காங்கிரீட் வளையம் அமைக்கும் பணி நடைபெற்றது.
இந்த பணிக்காக மதுரையை சேர்ந்த ஶ்ரீகண்டன், ஜெயராஜ், மகுடீஸ்வரன் ஆகியோர் தோட்டத்தில் தங்கி பணியாற்றி வந்துள்ளனர்.
அப்போது, ஶ்ரீகண்டன் மற்றும் ஜெயராஜ் இருவரும் அறையில் தங்கியிருந்த போது இரவு ஜெயராஜ் ரேடியோவை சத்தமாக வைத்து பாடல் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஶ்ரீகண்டன் ரேடியோவை இரும்பு கம்பியால் அடித்து உடைத்து, ஜெயராஜையும் தாக்கியுள்ளார்.
இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஜெயராஜ் கருங்கல்லை எடுத்து ஶ்ரீகண்டன் மீது போட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜெயராஜ் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இன்று விசாரணை நிறைவடைந்த நிலையில், ஜெயராஜ் குற்றவாளி என்றும், அவருக்கு ஆயுள் மற்றும் 2,500 அபராதம் விதித்து நீதிபதி பாலு உத்தரவிட்டார்.