ஐயம்பாளையத்தில் இன்று காலை சரக்கு ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது மட்டுமல்லாமல் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.
கோவை: பொள்ளாச்சி அருகேயுள்ள ஐயம்பாளையத்தில் சரக்கு ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை ஆட்சியர் சமீரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பொள்ளாச்சி அருகே ஐயம்பாளையத்தில் இன்று காலை தனியார் பேருந்து ஒன்று முன்னாள் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது எதிரே வந்த சரக்கு ஆட்டோ மீது பேருந்து பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சரக்கு ஆட்டோவில் பயணித்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் தனியார் பேருந்து சாலையோர தென்னந்தோப்புக்குள் சென்று கவிழ்ந்ததில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் காயமடைந்தவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவ மனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சமீரன், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த நிகழ்வின் போது, பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ், நகராட்சி தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.