வால்பாறை அருகே பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 17 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள அமல்தாஸ் என்பவருடைய மளிகை கடையின் ஜன்னல், கதவு போன்றவற்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளன.
கோவை: வால்பாறை அடுத்த பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரிந்த 17 யானைகள் அங்குள்ள மருத்துவமனை, வீடு, மளிகை கடை உள்ளிட்டவற்றை இடித்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து உணவு தேடி குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீடுகள், மளிகை கடைகள் மற்றும் நியாய விலை கடைகள் போன்றவற்றை இடித்து சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், வால்பாறை அருகே பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 17 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள அமல்தாஸ் என்பவருடைய மளிகை கடையின் ஜன்னல், கதவு போன்றவற்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளன.
இதனையடுத்து சரவணன் என்பவரது வீட்டின் ஜன்னலை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள், எஸ்டேட் மருத்துவமனையின் ஜன்னலை உடைத்து சேதப்படுத்தியுள்ளன.
நேற்று மாலையில் இருந்து தொலைபேசி தொடர்பு செயல்படாமல் இருந்ததால், யானைகள் நடமாட்டத்தை குறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தாமதமாக தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.