சதாம் உசேன் என்ற நபரை துடியலூர் பகுதியில் கைது செய்துள்ளோம். அவருடன் வந்தவரை தேடி வருகிறோம். 100 அடி ரோட்டில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சுக்கும் இவர்களின் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை: கடந்த 22 ஆம் தேதி சித்தாபுதூர் பகுதியில் உள்ள கோவை மாவட்ட மாநகர பாஜக அலுவலகம் அருகே மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்ற சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கோவை மாவட்ட ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்:
கோவை மாநகரில் வி கே கே மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் கடந்த 22ஆம் தேதி சுமார் 8:30 மணி அளவில் நடந்த பெட்ரோல் குண்டு வழக்கில், உடனடியாக காவல்துறை இரண்டு பிரிவில் - இந்திய தண்டனைச் சட்டம் 153a, 285 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது.
தொடர்ந்து மூன்று தனிப்படை அமைத்து புலன் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், தொழில்நுட்ப அடிப்படையில் புலன் விசாரணை, சாட்சிய விசாரணை என நடைபெற்ற விசாரணை அடிப்படையில், சதாம் உசேன் என்ற நபரை துடியலூர் பகுதியில் கைது செய்தோம்.
அவருடன் வந்தவரை தேடி வருகிறோம். சதாம் உசேனை விசாரணைக்கு பின் நீதிமன்ற காவலில் உட்படுத்துவோம்.
சதாம் உசேன் பி.எப்.ஐ-யில் துடியலூர் பகுதி பொறுப்பாளராக உள்ளார். ஏற்கனவே இவர் மீது வழக்கு உள்ளது. அதையும் விசாரித்து வருகிறோம்.
இவர்கள் எப்படி திட்டம் இட்டு சம்பவம் செய்தார்கள்..? இதில் வேறு யாராவதுக்கு சம்பந்தம் உள்ளதா? என்ற அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் 436, எக்ஸ்ப்லோசிவ் வழக்குகளை இத்துடன் இணைத்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல, இவர்களுக்கு நூறடி சாலையில் நடந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை மாநகரில் மூன்று வழக்குகளின் குற்றவாளிகளை கண்டுபிடித்துள்ளோம், இவ்வாறு தெரிவித்தார்.