அமைதியை குலைத்து விட்டு வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. அரசியல் காரணங்களுக்காக நடவடிக்கை எடுக்காமல் இருக்க கூடாது. சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதை முதலமைச்சர் அனுமதிக்க கூடாது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை பாஜக கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை ஆய்வு செய்த கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், குற்றவாளிகள் அனைவரையும் தமிழக காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கோவை பாஜக அலுவலகம் உள்பட சுமார் 6 இடங்களில் மர்ம நபர்கள் எரிபொருளை வீசிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி, கோவை குனியமுத்தூர், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள்கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற இடங்களில் இது போன்ற சமூக விரோத செயல்களில் விடுபட்டவர்களும் விரைவில்கைது செய்யப்படுவார்கள் என்று கோவை காவல்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்த பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது, கோவை மாநகர பகுதிகளில் 6 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளது. கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் வீடு, கடைகள் மீது தாக்குதல் நடந்துள்ளது. இதுவரை 2 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் நடந்து இருப்பதால் 4 எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோவை கோட்டத்தில் எனது தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, அறிக்கை கொடுக்க உள்ளோம்.
கோவை மாவட்டம் பல்வேறு காலகட்டங்களில் பயங்காரவாத தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இங்கு சிறு பிரச்சனையும் பெரும் விளைவை ஏற்படுத்தும். எனவே, தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டவர்களை ஆதாரம் இருந்தும் கைது செய்ய ஏன் தாமதம், இவ்வளவு சம்பவம் நடந்தும் 2 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற செயல்களில் யார் செயல்பாட்டாலும் தயவு தாட்சண்யம்பார்க்காமல் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதியை குழைத்து விட்டு விட்டு வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. கோவை பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வருகிறது. சட்டம் ஒழுங்குபாதிக்கப்படுவதை முதலமைச்சர் அனுமதிக்க கூடாது.
அரசியல் காரணங்களுக்காக நடவடிக்கை எடுக்காமல் இருக்க கூடாது. சமரசம் செய்து கொள்ளாமல் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டின் ஒற்றுமை, முன்னேற்றத்திற்கு எதிராக இருப்பவர்கள் தான், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இச்செயல்களில் விளம்பரம், சுயநலத்திற்காக செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்களை விட்டுவிடக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.