: குன்னூரில் நான்கு இருசக்கர ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம், குற்றச் செயல்களை தடுப்பது மட்டுமின்றி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், சுற்றுலா பயணிகளுக்கு உதவவும் இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி: மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் உலக அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் சுமார் 31 லட்சத்திற்கும் மேலான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
செயின் பறிப்பு, வழிப்பறி கொள்ளை போன்ற போன்ற குற்றங்களை தடுக்கும் பொருட்டும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளின் பாதுகாப்பை கருதியும், காவல்துறை சார்பில் பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதன்படி, இன்று நீலகிரி மாவட்டம் குன்னூரில் நான்கு இருசக்கர ரோந்து வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், குற்றச் செயல்களை தடுப்பது மட்டுமின்றி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், சுற்றுலா பயணிகளுக்கு உதவவும் இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குன்னூரின் முக்கியப் பகுதிகளான குன்னூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மவுண்ட் பிளசன்ட் ரோடு வழியாக ஓட்டு பட்டறை வரை ரோந்து பணியில் ஈடுபட ஒரு வாகனம், இதேப் போன்று டிபன்ஸ் சர்வீஸ் ஸ்டாப் காலேஜ், இராணுவ மையம், பிளாக் பிரிட்ஜ் வழியாக இரண்டாவது வாகனம் பயன்படுத்தப்படும்.
அதேபோல, குன்னூர் பேருந்து நிலையம் முதல் சிம்ஸ், பெட்போர்ட், ஒய்எம்சிஏ, பிராவிடன்ஸ் கல்லூரி வழியாக வண்டிச்சோலை வரை மூன்றாவது வாகனமும், கோத்தகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்ட பெட்டு முதல் அரவேணு வரை நான்காவது வாகனமும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் அறிக்கையில் கூறியுள்ளது.