குனியமுத்தூர் பகுதிகளில் தங்கி வரும் கல்லூரி மாணவர்களின் அறைகளில் இருந்து லேப்டாப், செல்போன், பணம் ஆகியவை அடிக்கடி திருட்டு போவதாக புகார் எழுந்துள்ளது. அப்பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் இருவேறு சம்பவங்களில் லேப்டாப், செல்போன், பணம் ஆகியவை திருட்டுப் போயுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை குனியமுத்தூர், காஸ்மோ காலனியை சேர்ந்த கல்லூரி மாணவர்களான பிரேம்குமார்(19), தரணிதரன்(20) ஆகியோர் வீட்டில் செல்போன், லேப்டாப், கடிகாரம் ஆகியவையும், குனியமுத்தூர் கே.ஜி.கே ரோட்டை சேர்ந்த துரைக்கண்ணு (40) என்ற தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 2 செல்போன் ரொக்கப்பணம் ரூபாய் 13,500 ஆகியவையும் திருட்டு போனது.
தொடர் திருட்டால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அச்சம் அடைந்துள்ளனர். கல்லூரி மாணவர்கள் தங்கும் அறைகளுக்கு அடிக்கடி அவர்களது நண்பர்கள் வந்து செல்வதால் அறை எப்பொழுதும் திறந்தே இருக்கும் என்றும் அவ்வாறு திருட்டுப் போனாலும் அதை பெரிதாக அவர்கள் பொருட்படுத்துவதில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
இந்த திருட்டு சம்பவங்களால் இப்பகுதியில் வீடுகளில் திருட்டு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்களை கண்டறிய அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் மேலும் இப்பகுதிகளில் ரோந்து பணிகளையும் தீவிர படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.