பொள்ளாச்சி அருகே குமரன் நகரில் உள்ள பாஜக நிர்வாகிகள் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை மர்ம கும்பல் ஒன்று சேதப்படுத்தி தீ வைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: பொள்ளாச்சி அருகே குமரன் நகரில் உள்ள பாஜக நிர்வாகிகள் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை மர்ம கும்பல் சேதப்படுத்தி தீ வைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி குமரன் நகரைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புசாரா தெற்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். இவர் நேற்றிரவு தனது வீட்டின் வெளியே காரை நிறுத்திவிட்டு உறங்கியுள்ளார்.
இந்நிலையில், நள்ளிரவில் கார் கண்ணாடியை உடைக்கும் சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்த போது இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் சிலர், காரை ஆயுதங்களால் உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதேபோல், அதே பகுதியை சேர்ந்த சிவா மற்றும் சரவணன் ஆகியோர் வீடுகளுக்கு சென்ற அந்த மர்ம கும்பல், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள் மற்றும் காரின் மீது கோடாறி, அறிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் பிளாஸ்டிக் கவர்களில் கொண்டு சென்ற டீசலை கார் மற்றும் ஆட்டோக்கள் மீது வீசி தீ வைக்க முயன்றுள்ளனர்.

அப்போது உடைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்த அக்கம்பக்கத்தினர் கூச்சலிட்டுள்ளனர். ஆட்கள் வருவதை அறிந்த மர்ம கும்பல், தீ வைக்கும் முயற்சியை கைவிடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பாஜக நிர்வாகிகள் பலரும் குமரன் நகர் முன்பு குவிந்தனர். இதனை தொடர்ந்து தகவலறிந்த கோவை மேற்கு காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
பாஜக நிர்வாகிகளின் வாகனங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.