தமிழகத்தில் சுமார் 16க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்ட, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோவையை சேர்ந்த இஸ்மாயிடம் விசாரணை மேற்கொண்டு அவரை அழைத்துச் சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எஸ் டி பி ஐ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொண்டர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.
கோவை: கோவை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் என்பவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இந்தியா முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சென்னை, மதுரை,கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் சுமார் 16க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அதில், கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் வீட்டிற்கு சிஆர்பிஎப் மற்றும் உள்ளூர் போலீசார் என 500க்கும் மேற்பட்ட போலீசார் உடன் வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து இஸ்மாயிலை விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.

இதனிடையே, இஸ்மாயிலை அழைத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்த சாலை மறியலில் ஈடுபட்ட எஸ் டி பி ஐ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொண்டர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். இதே போல், கேரளாவில் இருந்து வந்த இரண்டு பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ரயில் நிலையம் அருகே உள்ள ஹமல்டன் கிளப்பில் வைத்து இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, அவர்களையும் வேறு இடத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணைக்கு வந்த இடங்களில் சிஆர்பிஎப் வீரர்கள் குவிக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் காணப்பட்டது.