கடந்த வாரம் கோவை துடியலூரில் அழகு நிலைய ஊழியர் பிரபு என்பவர் கொடூரமாக வெட்டிக் கொலைச் செய்யப்பட்ட வழக்கில் பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவரது உடலை 12 துண்டுகளாக வெட்டிக் பல்வேறு இடங்களில் வீசி உள்ளது தெரியவந்துள்ளது.
கோவை: கடந்த 5 நாட்களுக்கு முன் கோவை துடியலூர் வெள்ளகிணறு பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் ஒரு ஆண் இடது கை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக விசாரிக்க மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் 3 நாட்களுக்குள் இறந்தவர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரபு என்பதும் அவர் கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள அழகு நிலையத்தில் வேலைப்பார்த்து வந்ததும் உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை துடியலூர் சந்தை அருகே உள்ள கிணற்றில் இரண்டு பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தொடர் தீவிர விசாரணைக்கு பின் பிரபுவை கொடூரமாக கொலை செய்து உடல் பாகங்களை ஆங்காங்கே வீசிச் சென்ற கவிதா என்ற பெண் உட்பட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கொலை வழக்கு தொடர்பான செய்தியாளர் சந்திப்பு, மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்றது. அப்போது பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், டி.ஐ.ஜி முத்துச்சாமி, மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் ஆகியோர் வழக்கு தொடர்பாக 150 கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டதில் அமுல் திவாகர் (35), கார்த்திக் (24), கவிதா (39) என்ற மூன்று பேர் சேர்ந்து பிரபுவை கொடூரமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது என்றனர்.
இதில், கவிதா என்ற பெண் சரவணம்பட்டி பகுதியில் அழகி நிலையம் வைத்து நடத்தி வருகிறார். பிரபு மற்றும் கவிதா இருவருக்கும் பழக்கம் இருந்த நிலையில், கவிதாவை புகைப்படம் எடுத்து பிரபு மிரட்டி வந்துள்ளார்.
இதனால், ஆத்திரம் அடைந்த கவிதா தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து பிரபுவை கொலை செய்ய முடிவு செய்ய திட்டம் தீட்டி வந்துள்ளார்.
சம்பவத்தன்று, இரண்டு நபர்கள் இரு சக்கர வாகனத்தில் பிரபுவை அழைத்து சென்றுள்ளனர். கவிதாவின் செல்போனும், பிரபுவின் செல்போனும் ஒரே நேரத்தில் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், மூவரும் சேர்ந்து அவரை 12 துண்டுகளாக வெட்டி கொலை செய்துள்ளனர்.
அவரது உடல் பாகங்களை, சாக்கடை, கிணறு குப்பை தொட்டியில் வீசியுள்ளனர். இதுவரை 8 உடல் பாகங்கள் கிடைத்துள்ள நிலையில் மீதம் உள்ள பாகங்களை கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கவிதாவிற்கும் பிரபுவிற்கும் ஏற்கனவே தொடர்பு இருந்த நிலையில், அவரது புகைப்படங்களை வைத்து தொடர்ந்து மிரட்டி வந்ததால், கவிதா அவரது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து பிரபுவை கொலை செய்துள்ளனர்.
குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையில் சிறப்பாக செயல்பட்ட 43 பேரை ஐஜி சுதாகர் பாராட்டினார்.