தடாகம் சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் காரணமாக இடையர்பாளையம் அருகேயுள்ள சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தனியார் பேருந்து சிக்கிக் கொண்டதால் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், கிரேன் கொண்டு பேருந்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவை: இடையர்பாளையம் அருகே தடாகம் சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தனியார் பேருந்து ஒன்று சிக்கிக் கொண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
கோவை தடாகம் சாலையில் சிவாஜி காலனி முதல் கேஎன்ஜி புதூர் வரை குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக பிரதான மாநில நெடுஞ்சாலையான தடாகம் சாலையின் பல்வேறு இடங்களில் குழாய்கள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
இந்த சாலையில் இடையர்பாளையம் அருகே காந்தியடிகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் வாசலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் அங்கு பள்ளம் தொண்டப்பட்டு வேலை நடப்பது தொடர்பாக முறையாக எந்த அறிவிப்பும் வைக்கப்படவில்லை. இதை அறியாமல் அவ்வழியே வந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக அந்த பள்ளத்திற்குள் சிக்கிக் கொண்டது. இதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் பத்திரமாக இறக்கிவிட்டு பேருந்தை கிரேன் மூலம் பேருந்தை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தடாகம் சாலையில் கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் காரணமாக ஏற்கனவே அப்பகுதியில் கடும் தூசி பிரச்சனை இருந்து வந்த நிலையில், தற்போது சாலைகளில் அடிக்கடி பள்ளம் ஏற்படுவதால் வாகன ஓட்டிகளும்,பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
பேருந்து பள்ளத்திற்குள் சிக்கியதை தொடர்ந்து தடாகம் சாலையில் அப்பகுதி மக்களே தாமாக முன்வந்து வாகன போக்குவரத்தை மாற்றி அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.