ஆ.ராசாவின் உரையை திரித்து, வெட்டி, பா.ஜ.க.வும், பார்ப்பன ஏடுகளான ‘தினமலர்’ போன்றவையும் வேறு பிரச்சினைகளை வைத்து தி.மு.க.விற்கு எதிராக களம் காணுவதில் அடைந்த தோல்வியை மறைக்க முயற்சிக்கின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார்.
இந்துக்கள் தொடர்பாக மனுதர்ம நூலில் இருக்கும் கருத்துக்களை ஆ.ராசா பேசியதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் அதனை சந்திக்கவும் தயார் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை பெரியார் திடலில் கடந்த 6.9.2022 அன்று ‘விடுதலை’ சந்தா வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆ.ராசாவின் உரையை திரித்து, வெட்டி, பா.ஜ.க.வும், பார்ப்பன ஏடுகளான ‘தினமலர்’ போன்றவையும் வேறு பிரச்சினைகளை வைத்து தி.மு.க.விற்கு எதிராக களம் காணுவதில் அடைந்த தோல்வியை மறைக்க, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். - பார்ப்பன மற்றும் அவர்களது அடிவருடிகளின் கூட்டணி ஆ.இராசா எதிர்ப்புப் பிரச்சாரம் என்ற போர்வையில் தி.மு.க.வுக்கு எதிராகத் திட்டமிட்ட கோயபல்ஸ் பிரச்சாரத்தை சமூக வலை தளங்களிலும், சில ஏடுகளிலும் தொடர்ந்து எழுதியும், பேசியும், நடத்தியும் வருகின்றன.
ஆ.ராசா பேசியது என்ன?
தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி.யின் பேச்சு பதிவிலிருக்கிறது; சொல் மாறாது ‘விடுதலை’யிலும் (12.9.2022) வெளிவந்துள்ளது. மனுதர்மத்தில் உள்ள ‘‘சூத்திர, பஞ்சமன்’’ என்ற அர்த்த விளக்கம் எவ்வளவு மானக் கேடானது; பெரும்பான்மையான உழைக்கும் நமது இன மக்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் சொல் என்பதைத்தான் அவர் சுட்டிக் காட்டிப் பேசினார்.
அந்த இழிவுக்குப் பரிகாரம் தேடவேண்டாமா? இதற்காக, வழக்குப் போட்டு அவரை நீதிமன்றத்திற்கு அழைத்தாலும், அதை எதிர்கொண்டு மனுதர்மம், கீதை போன்ற ஜாதியை வலியுறுத்தும், பெண்களைக் கொச்சைப்படுத்தும் பல ஹிந்து மத சாஸ்திரங்கள், தர்ம விளக்கம்பற்றி நீதிமன்றத்திலேயே அலசி அலசிச் சுட்டிக்காட்ட அவரும் தயார் - அவர் சார்பில் பெரியார் தொண்டர்களாகிய நாமும் தயார்! மீண்டும் மனுதர்மம் சாயம் வெளுப்பதற்குத் தந்த வாய்ப்புக்கு நன்றி!
ஆ.ராசா பேச்சை வெட்டி ஒட்டித் திரித்து வெளியிடுவதா?
நோயைச் சுட்டிக்காட்டி, விஷக் கிருமிகளை அடையாளம் காட்டிவரும் டாக்டர்கள்தான் - நோய் பரப்புபவர்கள் என்று திசை திருப்பினால், அது எவ்வளவு கேவலமான கண்டனத்திற்குரியதோ, அதே பணியைத்தான் - ஏதாவது புரளி கிளப்பி அதில் புரண்டு மகிழ்கின்றனர் காவிக்கட்சியினர்.
இதேபோலத்தான் முன்பு ‘மனுதர்மம்‘பற்றி பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தோழர் தொல்.திருமாவளவனின் பேச்சையும் திசை திருப்பி, பிரச்சினை புழுதி கிளப்பி, மூக்குடைப்பட்டு மூலைக்குச் சென்று முடங்கினார்கள்.
இப்போது இப்படி ஒரு கேவலமான பொய்ப் பிரச்சாரத்தை, சில பூணூல் ஊடகங்கள், ‘பொய் மயப் பிரச்சாரம்‘ என்ற மண் குதிரையில் பயணம் செய்கிறார்கள்!
தந்தை பெரியாரும் - அண்ணல் அம்பேத்கரும் மனுதர்மத்தை எதிர்த்தது - எரித்தது ஏன்?
தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் ஏன் மனுதர்மத்தை எரித்தார்கள்? பல ஆண்டுகளுக்கு முன்? இந்த பிறவி இழிவை நிலை நாட்டும் - பாதுகாத்து சட்டத்திலும் பரப்பும் மூல வித்து அது என்பதால் தானே! ‘இனமலர்’ ஏட்டின் கற்பனை வாசகர் கடிதத்தில் ஒரு ‘அறிவுக் கொழுந்து’ எங்கே இருக்கிறது என்று கேட்கிறது! அட மூட ஜென்மங்களே!
இதோ மனுதர்ம ஆதாரம்
‘‘அசல் மனுதர்மம்‘’ நூலில் 1919 இல் (103 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ப் பதிப்பு) திருவந்திபுரம், கோமாண்டூர் இளையவில்லி ராமானுஜாச்சாரியார் மொழி பெயர்ப்பு - அத்தியாயம் 8 - சுலோகம் 415 இல் உள்ள வாசகங்களை அப்படியே தருகிறோம்.
‘‘யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டுவரப்பட்டவன்
பக்தியினால் வேலை செய்கிறவன்
தன்னுடைய தேவடியாள் மகன்
விலைக்கு வாங்கப்பட்டவன்
ஒருவனால் கொடுக்கப்பட்டவன்
குலவழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன்
குற்றத்திற்காக வேலை செய்கிறவன்’’ என தொழிலாளிகள் எழுவகைப்படுவர்!
இது போதாது என்றால், அக்னிஹோத்திரம் ஸ்ரீ ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதி, ‘நக்கீரன்’ பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட ‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’ என்ற நூலிலும் பச்சையாகவே மேற்சொன்ன விளக்கம் உள்பட பலவற்றை அவர் புட்டுப் புட்டு வைத்துள்ளார்.’’ ஆதாரங்களைக் குவிக்க நாங்கள் என்றும் தயார்!
நீதிமன்றத்திலும் சந்திக்கத் தயார்!
இவற்றை நீதிமன்றத்தில் ஏற்றி, உலகம் முழுவதும் பரவிட, ஹிந்து மதம் என்ற வேத சனாதன மதத்தின் உண்மை யோக்கியதையை ‘ஸ்கேன்’ செய்ய வாய்ப்புத் தந்தால் நன்றி! எங்களிடம் பூச்சாண்டி மிரட்டல் ஏதும் கிடையாது; ‘ஹிந்து’ மதம் என்ற சொல்லே முதலில் எந்த இந்திய மொழி - சொல்லுவீர்களா?
‘அது அந்நியன் தந்த பெயர் என்பதை காஞ்சி சங்கராச்சாரியாரே பகிரங்கமாக கூறியுள்ளதற்குப் பிறகும் உங்களுக்கு ஏன் இந்த கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியும் புத்தி? பெரியார் மண்ணில் எடுபடாது!
கருத்தைக் கருத்தால் சந்திக்கத் திராணி இல்லாத தில்லுமுல்லு திருகுதாளப் பேர்வழிகளே - உங்கள் வித்தைகள் பெரியார் மண்ணில் எடுபடாது. உண்மை ஒருபோதும் உறங்காது! உலா வருவது உறுதி!!
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.