தமிழக அரசின் புதிய மின் கட்டண உயர்வை தொழில்துறையினர் கடுமையாக எதிர்த்து வரும் சூழலில், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: மின் கட்டண உயர்வின் காரணமாக பல்லடத்தின் முக்கிய தொழில்களான விசைத்தறி, கோழிப்பண்ணை ஆகியவை முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறி, மத்திய - மாநில அரசுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய மின் கட்டணத்திற்கு, தொழில் துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தொழில் நகரங்களான கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு கட்ட போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கொசவம்பாளையம் சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கார்ப்பரேட் கம்பெனிகளிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க மாநில அரசுகளை மத்திய அரசு நிர்பந்திப்பதாகவும், தொழிலையும், மக்கள் வாழ்வையும் பறிக்கும் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும், இந்த மின் கட்டண உயர்வால் பல்லடத்தின் பிரதான தொழில்களான விசைத்தறி மற்றும் கோழிப்பண்ணை ஆகியவை பெரிய அளவில் பாதிப்படையும் சூழல் ஏற்படும் எனவும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.