தண்டுக்காரன்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மனு அளிக்க வந்த பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அதிருப்தி அடைந்த பெண்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் அடுத்த தண்டுக்காரன் பாளையம் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி மனு அளிக்க வந்த பெண்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தண்டுக்காரன்பாளையம் பகுதியில் அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையால், பெண்கள் பாதிக்கப்படுவதால் கடையை அகற்றக் கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
மேலும் அமிலம் கலந்த மதுபானம் விற்பனை செய்யப்படுவதால் அதை அருந்தும் ஆண்களும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் அவலநிலை இருப்பதாக பெண்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
எனவே, மக்களுக்கு பல்வேறு வகையில் இடையூறாக உள்ள கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பெண்கள் உட்பட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.
இந்நிலையில், கூட்டமாக வந்த பெண்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்க மறுத்ததால், அதிருப்தியடைந்த பெண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவியதால், இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆட்சியரை சந்தித்து மதுபான கடையை அகற்றக்கோரி மனுவை அளித்தனர்.