நிலுவையில் உள்ள பள்ளிக் கட்டணம் செலுத்தினால் மட்டுமே மாற்றுச் சான்றிதழை தரமுடியும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்து வருவதால், இரண்டரை ஆண்டுகளாக கல்லூரியில் சேர முடியாமல் மன உளைச்சலில் உள்ளதால், ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தனர்.
கோவை: ஏழை மாணவியின் மாற்றுச்சான்றிதழை பெற்றுத்தர கோரியும், மாணவியை மிரட்டிய தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அதில், வீரபாண்டி சாலையில் இயங்கி வரும் விவேகம் மெட்ரிக் பள்ளியில், வீரபாண்டியை சேர்ந்த மாணவி ஒருவர் அப்பள்ளியில் எல்.கே.ஜி. முதல் படித்து வருகிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவரது தந்தை ஜேம்ஸ் குடும்பத்தை கைவிட்டு சென்ற நிலையில், இவரது தாயார் சாரதா தோட்ட வேலைக்கு சென்று தன் இரு குழந்தைகளையும் படிக்க வைத்து வந்தார். இதனால் மாணவிக்கு 2 ஆண்டுகளாக பள்ளிக் கட்டணம் செலுத்த இயலாத சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த 2019 மற்றும் 2020 ஆண்டு 12ம் வகுப்பு பயின்று பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவி தனது மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் வாங்குவதற்காக பள்ளிக்கு சென்ற போது பள்ளி நிர்வாகம் தரப்பில் நிலுவையில் உள்ள ரூ.1,15,318 பள்ளிக் கட்டணம் செலுத்தினால் மட்டுமே மாற்றுச் சான்றிதழை தர முடியும் என மாணவியை மிரட்டியும் மற்ற குழந்தைகளின் முன் அவமானப்படுத்தி மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளனர்.
மேலும், மாணவி மற்றும் அவரது தாயார் சாரதாவிடமும் கல்விக் கட்டணத்தை சிறிது சிறிதாக தந்து விடுகிறோம் என உறுதி மொழிக் கடிதத்தை மிரட்டி எழுதி வாங்கி உள்ளனர். இரண்டரை ஆண்டுகளாக இதுவரை மாற்றுச் சான்றிதழ் தராததால், கல்லூரியில் சேர முடியாமலும், படிப்பை தொடர முடியாமல் மிகுந்த மன உளைச்சலுடன், மாணவி வீட்டில் இருந்து வருகிறார்.
ஏழ்மை நிலையை எடுத்துக்கூறி, பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், தனது மாற்றுச் சான்றிதழை பெற்றுத்தரக்கோரியும் மாணவி, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுவரை 8 முறை சென்றும் மழுப்பலான பதிலையே கூறி வருகின்றனர்.
எனவே, உடனடியாக கோவை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு அந்த ஏழை மாணவிக்கு மாற்றுச் சான்றிதழ் பெற்றுத் தரும்படியும், எழை மாணவியை மிரட்டிய பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பாமகவின் கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.