வரும் ஞாயிறு முதல் (18.09.2022) வாரந்தோறும் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை டி.பி. ரோட்டில் "ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ்"-ஐ நடத்த உள்ளதாகவும், அனுமதி இலவசம் என்பதால் மக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவை: மக்களுக்கு சமூக வாழ்வின் அவசியத்தையும், இயற்கையோடு இயைந்து வாழ்வதன் இன்றியமையாமையும் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தையும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக,வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் "ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ்" என்ற நிகழ்வை நடத்த உள்ளதாக கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இன்றைய, காலக் கட்டத்தில் அவசர வாழ்வில் வாழ்ந்து வரும் மக்கள், வாகன நெரிசல் காரணமாக சாலை பயணங்கள் என்பது, பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கு, அழுத்தத்தையே தருகிறது.
இவற்றிற்கு ஒரு மாற்று வழியாக சிந்திக்கப்பட்டதே "ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ்". இதன் மூலம் ஞாயிறு தோறும் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை சாலைகள் தோறும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு சாலைகளில் யோகாசனம், ஜும்பா, ஏரோபிக்ஸ் போன்றஉடற்பயிற்சிகளும் அதோடு கால்பந்து, மட்டைப்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டு தளங்களுக்கு ஏற்பாடு மற்றும் மக்கள் தங்கள் திறமைகளையும் வெளிப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், நாட்டுப்புற கலைகளான பறை, மயிலாட்டம், பொய்க்கால் குதிரை போன்றவற்றின் அரங்கேற்றமும் இந்நிகழ்வின் ஒருபகுதியாகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த நிகழ்வு, கடந்த ஆகஸ்ட் 2015 ஆம் ஆண்டில் கோவை ஆர்.எஸ்.புரம் சாலைகளிலும், 2017-ம் ஆண்டில் ரேஸ்கோர்ஸ் பகுதியிலும் நடைபெற்றது. ஆனால், பல்வேறு காரணங்கள் காரணமாக அவை நிறுத்து வைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, மீண்டும் ஒரு தொடக்கமாக கோவை மாநகராட்சி, ஸ்மார்ட் சிட்டி, தனியார் நாளிதழுடன் இணைந்து வருகின்ற ஞாயிறு முதல் (18.09.2022) வாரந்தோறும்காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை டி.பி. சாலையில்"ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ்"-ஐ நடத்த உள்ளது.
"நிகழ்வின் போது , வாடகை இல்லா மிதிவண்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் அசல் அடையாள அட்டைகளை கொண்டு இச்சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மக்களுக்கு சமூக வாழ்வின் அவசியத்தையும், இயற்கையோடு இயைந்து வாழ்வதன் இன்றியமையாமையும் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தையும் ஒரு சேர வலியுறுத்துவதே ஹாப்பி ஸ்டரீட்ஸின் பிரதான நோக்கமாகும்",என்று மாநகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.
அனுமதி இலவசம் என்பதால் மக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் கேட்டுக்கொண்டுள்ளார்.