தேசிய கண்தான விழிப்புணர்வு வாரத்தையொட்டி, திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் உள்ள டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி நடத்தப்பட்டது.
திருப்பூர்: கண் தான விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு திருப்பூரில் செவிலியர் கல்லூரி மாணவ - மாணவிகள் மனித சங்கிலி இயக்கம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
தேசிய கண்தான இரு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஆகஸ்டு 25-ந் தேதி முதல் செப்டம்பர் 8-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. பொது மக்களிடையே கண் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த கண் தான விழிப்புணர்வு வாரமானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தேசிய கண்தான விழிப்புணர்வு வாரத்தையொட்டி, திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் உள்ள டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி இயக்கத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில், பொதுமக்கள் அனைவரும் கண் தானம் செய்ய வேண்டும், அதன் மூலம் இறந்த பிறகும் நமது கண்கள் மூலம் பிறர் உலகை பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்பதை வலியுறுத்தி கண்தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், தனியார் செவிலியர் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டு, கண் தானத்தை வலியுறுத்தும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.