வெள்ளைக்கிணர் பகுதியில் ஆணின் கை 2 துண்டுகளாக வெட்டப்பட்டு குப்பை தொட்டியில் வீசப்பட்டுள்ள நிலையில், மற்ற உடல் பாகங்கள் அருகில் உள்ள குப்பை தொட்டிகளில் கிடக்கிறதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: துடியலூர் அடுத்த வெள்ளைக்கிணர் பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் இருந்து இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட ஆணின் கை மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துடியலூர் அடுத்துள்ள வெள்ளக்கிணர் பிரிவு வி.கே.எல் நகர் பகுதியில் இன்று காலை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வாகனம் மூலம் குப்பைத்தொட்டியில் இருந்து குப்பைகளை அள்ளிக்கொண்டு இருந்தனர்.
அப்போது பிளாஸ்டிக் பையில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் இரண்டு துண்டுகளான ஆணின் கை கிடந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள் உடனடியாக துடியலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு கோவை மாவட்ட காவல் கண்காளிப்பாளர் பத்ரி நாராயணன், பெரியநாயக்கன் பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்தனர்.
இதனைதொடர்ந்து இரண்டு துண்டுகளாக கிடந்த அந்தக் கையை ஆய்வு செய்த போது அது 45 வயது மதிக்கத்தக்க ஆணின் இடது கை என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அங்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், அக்கம் பக்கத்தில் உள்ள சி.சி.டி.வி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அருகில் உள்ள காவல் நிலையங்களில் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் உடலின் மற்ற பாகங்கள் அருகில் ஏதேனும் வீசப்பட்டுள்ளதா என அருகிலுள்ள குப்பைத் தொட்டிகளை ஜேசிபி இயந்திரம் மூலம் தேடி வருகின்றனர்.
குப்பை தொட்டியில் ஆணின் கை வெட்டப்பட்டு கிடந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.