மின்சார கட்டண உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுக தலைமை கழகம் சார்பில் வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் குறித்த கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம், திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.
திருப்பூர்: திமுக அரசுக்கு எதிராக ஒரு மாத காலம் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சரியான பாடம் புகட்டப்படும், என முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி, ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டண உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுக தலைமை கழகம் சார்பில் வரும் 16-ம் தேதிஆர்ப்பாட்டம் நடத்த மாவட்ட செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் துணை சபாநாயகரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், இலங்கை அதிபர் ராஜபக்சே போல் திமுக தலைவரும் குடும்பத்தோடு இரவோடு இரவாக தப்பி ஓடக்கூடிய காலம் வரும். கொரோனா ஊரடங்குக்கு பிறகு மக்கள் தற்பொழுது மீண்டு வரக்கூடிய சூழ்நிலையில் வீட்டு வரி, சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு போன்றவற்றால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மக்கள் சரியான பாடம் கற்றுக் கொடுப்பார்கள்.
திமுக அரசுக்கு எதிராக ஒரு மாத காலம் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு, அதை ஆளுநருக்கு அனுப்பி முதல்வர் ஸ்டாலினுக்கு சரியான பாடம் கற்பிக்கப்படும்.
திருப்பூரில் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்களை திரளாக பங்கேற்கச் செய்ய வேண்டும். தமிழகமே திரும்பிப் பார்க்கக் கூடிய அளவிற்கு திருப்பூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஒன்றிணைந்து நடத்திட வேண்டும், என்றார்.
கூட்டத்தில், திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சு.குணசேகரன், NSN.நடராஜன், மாமன்ற உறுப்பினர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதிஉட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.