லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையின் போது, போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் உட்பட 390 பேர் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றத்திற்காக ஐபிசி 151 பிரிவின் கீழ் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை: சுகுணாபுரத்தில் காவல்துறையின் தடை உத்தரவை மீறி முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 7 அதிமுக எம்.எல்.ஏக்கள் உட்பட 390 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எல்.இ.டி விளக்கு கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக நேற்று (13.09.2022) எஸ்.பி.வேலுமணி இல்லம் உள்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் கோவை சுகுணாபுரம் பகுதியில் எஸ்.பி.வேலுமணி வீட்டிற்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைக்கு வந்த போது, அவரது வீட்டின் முன்பு கூடிய அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தொண்டர்கள் அப்பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கூடி கோஷங்களை எழுப்பினர்.
சட்ட ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு போலீசார் அவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தியும் தடை உத்தரவை மீறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தமோதிரன், கந்தசாமி, அம்மன் அர்ஜூணன், அமுல் கந்தசாமி, அருண்குமார், செல்வராஜ், ஜெயராம் மற்றும் 72 பெண்கள் உட்பட 390 பேரை கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில் போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் உட்பட 390 பேர் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றத்திற்காக ஐபிசி 151 பிரிவின் கீழ் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.