கடந்த அதிமுக ஆட்சியை கவிழ்க்க விடாமல் செய்து, கட்சிக்கு விசுவாசமாக இருந்ததால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை தனது முக்கிய எதிரியாக பார்க்கிறார் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சாடினார்.
கோவை: அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே எனது வீட்டில் 3வது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றுள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் இன்று காலை தொடங்கிய லஞ்ச ஒழிப்பு துறையினரின் சோதனை 8 மணி நேரம் கழித்து மாலை 6 மணியளவில் நிறைவுபெற்றது.
சோதனை நிறைவடைந்த நிலையில், கோவை சுகுணாபுரத்தில் உள்ள அவர் வீட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அரசியல் காழ்புணர்ச்சியால் பழிவாங்கும் வகையில் எனது வீட்டில் மூன்றாவது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றுள்ளது.
தொடர்ந்து காவல்துறையை தவறான முறையில் திமுக பயன்படுத்துகிறது. எந்த முதலமைச்சரும் இதுபோல நடந்து கொள்ளவில்லை. இந்த சோதனையில் எந்த ஆதாரமும் சிக்கவில்லை. ரூ.7,500 பணம், அம்மாவின் கம்மல் உள்ளிட்ட சிறு பொருட்களை எடுத்துள்ளனர்.
இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. கடந்த இரண்டு முறை நடந்த சோதனையிலும் எதுவும் கைப்பற்றவில்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக அரசை கவிழ்க்க ஸ்டாலின் முயன்றார்.
அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு உறுதுணையாக இருந்ததால் இப்போது வழக்கு போடுகிறார்கள். அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னத்தை காப்பாற்றினோம். இதனால் பழிவாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மின்சார கட்டண உயர்வை திசை திருப்பவே இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று உள்ளது. திமுக அரசு பொதுமக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அதிமுகவினரை முழுமையாக பழி வாங்குகிறார்கள். சோதனையின் மூலம் காவல்துறையை வைத்து திமுக அரசியல் செய்கிறது.
நீதிமன்றத்தில் எனது வழக்கு வரும் போதெல்லாம், பொய் செய்தியை பரப்பும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையின் போது முழு ஒத்துழைப்பு அளித்தோம்.
அதிமுக தொண்டர்கள், வழக்கறிஞர்களின் சட்டையை கிழித்து துன்புறுத்தி, மண்டபத்தில் அடைத்து காவல்துறை அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இது அரசியல் பழிவாங்குதலில் உச்சகட்டம்.
வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும். மீண்டும் எடப்பாடி முதலமைச்சராக வருவார். மின் கட்டண உயர்வை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை முடக்கவே சோதனை நடத்தியுள்ளனர்.
எல்.இ.டி திட்டம் ஜெயலலிதா ஆட்சியின் போது கொண்டு வரப்பட்டது. எவ்வித ஆதாரமும் இல்லாமல் பொய் வழக்கை திமுக போடுகிறது. எல்லா ஒப்பந்தமும் சட்டப்படி நடந்துள்ளது. ஸ்டாலின் என்னை மிரட்டிப் பார்க்க நினைத்தால் அது முடியாது.
திமுக ஆட்சியில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் 5 ஆயிரம் கோடிக்கும் மேல் அமைச்சர்களிடம் ஸ்டாலின் குடும்பம் வாங்கியுள்ளது.
திமுக அரசு மீடியாவை மிரட்டி, காவல் துறை கைக்கூலியாக வைத்துக் கொண்டு எந்த திட்டத்தையும் செய்யாத கையாலாகாத அரசாக உள்ளது. எந்த திட்டத்தையும் திமுக செய்யவில்லை.
அதிமுக ஆட்சியை கவிழ்க்க விடாமல் தடுத்து அதிமுக கட்சிக்கு விசுவாசமாக இருந்ததால் ஸ்டாலின் என்னை முக்கிய எதிரியாக நினைக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.