திருப்பூரில் முறைகேடாக இயங்கி வரும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராடி வரும் விவசாயிகள் மனு அளித்த நிலையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கல்குவாரி உரிமையாளர்களும் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
திருப்பூர்: பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் கல்குவாரிகளுக்கு எதிராக விவசாயிகள் புகார் மனு அளித்த நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கல்குவாரி உரிமையாளர்களும் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளான இச்சிப்பட்டி ,கோடங்கிபாளையம் , 63 வேலம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.
இந்த கல்குவாரிகளால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் அரசு அனுமதித்த அளவை விட அதிக ஆழத்தில் வெடி வைத்து தகர்க்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் விவசாயம் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டி அப்பகுதியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கல் குவாரிகளை மாவட்ட நிர்வாகம் முறையாக கண்காணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய அமைப்பினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதேபோல், திருப்பூரில் இயங்கி வரும் கல்குவாரிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, இதை நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில், விவசாயத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமல் அரசின் விதிகளோடு செயல்பட்டு வரும் கல் குவாரிகளுக்கு எதிராக போலியான நோக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, இத்தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
முன்னதாக, கல்குவாரிகளுக்கு எதிராக புகார் அளிப்பவர்களை கண்டித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், அங்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீமிடம் தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
மக்கள் குறைதீர்ப்பு நாளான இன்று, இரு தரப்பினரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் ஆட்சியரிடம் புகார் அளித்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.