கடந்த 2007 ஆம் ஆண்டு கோவை வின்சன்ட் சாலையில் இருந்த ஹவுசிங் யூனிட் கட்டிடம் பழுதானதால், அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட 350 குடும்பங்களுக்கு இன்று வரை மாற்று வீட்டுமனை ஒதுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.
கோவை: கோவை வின்சென்ட் ரோடு பகுதியை சேர்ந்த மக்கள், வீட்டுமனை பட்டா கேட்டு கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை வின்சென்ட் ரோடு பகுதியில் 350 குடும்பங்களுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2007ஆம் ஆண்டு அவர்கள் குடியிருந்து வந்த ஹவுசிங் யூனிட் கட்டிடம் பூமிக்குள் புதைந்து பெரும் விபத்துக்குள்ளானது.
இதையடுத்து அப்போதைய திமுக அரசு 350 குடும்பங்களை சேர்ந்த மக்களையும் ஹவுசிங் யூனிட் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றி அந்த கட்டிடடத்தை இடித்து அப்புறப்படுத்தியது. அதே நேரத்தில் அப்பகுதியில் குடியிருந்த மக்களுக்கு வீடுகள் ஒதுக்கி தராமல் ஒருதலை பட்சமாக நடந்து கொண்டதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளாக இருப்பிடம் இன்றியும் வாழ்வாதாரம் இழந்தும் தவித்து வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று 300க்கும் மேற்பட்ட மக்கள், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவை எம்.பி. நடராஜன் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய எம்.பி. நடராஜன், 15 வருடங்களாக வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து சிரமப்பட்டு வரும் மக்களுக்கு உடனடியாக மாநில அரசு குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக மாற்று வீடு ஒதுக்கி உதவிட வேண்டும் என்று மாநில அரசுக்கு வலியுறுத்தினார்.